கொரோனா பரவலால் தடை- வெறிச்சோடிய ஏற்காடு; கொடைக்கானல், ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்!
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் ஏற்காடு மலை வாசஸ்தலத்துக்கு சுற்றுலா பயணிகள் வார இறுதி நாட்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ள கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாமல்லபுரம் கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடுவது கவலைக்குரியதாக உள்ளது.
Recommended Video
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று ஏற்காடு. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காடு நோக்கி படையெடுத்து வருகின்றனர். அத்துடன் அரசின் கொரோனா கால கட்டுப்பாடுகளை கடைப்படிப்பதும் இல்லை. இதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.

வார இறுதி நாட்களில் தடை
இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுற்றுலாப் பயணிகள், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காடு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் பிற நாட்களில் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும், ஏற்காட்டில் வசிக்கும் உள்ளூர் மக்கள் போக்குவரத்தின் போது, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணங்களை காட்டி பயணிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு வரும் ஆகஸ்ட் 9-ந் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் தேவைப்பட்டால் இந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே போல் மக்கள் அதிகம் கூடும் கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்காடு சுற்றுலா இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கும் துண்டுப் பிரசுரங்களும் விநியோக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் கூட்டமாக நிற்கும் இடங்களில் ஒலி பெருக்கி மூலம் கலைந்துசெல்லவும் கொரோனா கால கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

குவியும் பயணிகள்
இதேபோல் கொரோனா லாக்டவுன் தளர்வு காரணமாக மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த மாதம் 5-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பார்வையிடும் இடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கேரள மாநில சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கேரளா பயணிகள்
கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. இதனால் கேரள மாநில சுற்றுலா பயணிகளால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து கொடைக்கானலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடியில் பரிசோதனை செய்யப்படுகிறது. வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர் மேலும் கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 14, 15-ந் தேதிகளில் பெருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநில பக்தர்கள் பங்கேற்பர். கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த ஆண்டு புனித சலேத் அன்னை ஆலயப் பெருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு அரசு கட்டுப்பாடுகளுடன் இந்த பெருவிழா கொடியேற்றத்துடன் எளிமையாக தொடங்கியது. இவ்விழாவுக்கு வரும் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குமரி, குற்றாலம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி கடற்கரை உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க வரும் 9-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. திரிவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதனால் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குற்றாலம் அருவிகளில் ரம்மியாமக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் குற்றாலம் வருகை தரும் பயணிகள் சீறிப் பாயும் அருவிகளை தொலைவில் நின்று பார்த்து விட்டு திரும்புகின்ற நிலைதான் உள்ளது.

ஊட்டியிலும் ஏமாற்றம்
கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் இருந்து வரும் நிலையில் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் எதுவும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்தாலும் சுற்றுலா தலங்கள் திறக்கப்படாமல் உள்ளதால் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

திருச்சியில் அனுமதிக்கப்படுமா?
திருச்சியில் முக்கொம்பு உள்ளிட்ட பல சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. முக்கொம்பில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்காவும் பயன்பாடும் பராமரிப்பும் இல்லாமல் கிடக்கிறது..

மாமல்லபுரத்தில் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடற்கரைக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள்தான் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் துண்டு பிரசுரம் மூலம் இடைவிடாமல் அறிவுறுத்தல் விடுத்து வருகிறது. மேலும் நீண்ட காலத்துக்குப் பின்னர் மாமல்லபுரத்தில் வியாபாரம் களைகட்டி இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications