ட்விஸ்ட்! இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் அதிமுக உடன் கைகோர்க்கும் தேமுதிக? இடப்பங்கீடும் ஓவர்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாவட்டத்தில் மட்டும் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பலமுனை போட்டி நிலவுகிறது.

அதிமுக- தேமுதிக
இந்நிலையில், ஒரு மாவட்டத்தில் மட்டும் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இரு கட்சிகளும் கடந்த 2011 சட்டசபைத் தேர்தலை ஒன்றாக எதிர்கொண்டிருந்தது. அதேபோல 2019 மக்களவை தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக 4 இடங்களில் போட்டியிட்டது.

தனித்துப் போட்டி
2021 சட்டசபைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் இந்தக் கூட்டணி முறிந்தது. அதற்குப் பதிலாக அமமுக உடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டது தேமுதிக. இருப்பினும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம் என தேமுதிக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது.

ஒரு மாவட்டம்
அதன்படி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேமுதிக தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் 6 வார்டுகளிலும், அறந்தாங்கியில் 3 வார்டுகளிலும், ஆலங்குடியில் 2 வார்டுகளிலும் தேமுதிக போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர்
மாநில அளவில் மற்ற அனைத்து மாவட்டங்களில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடும் நிலையில், புதுக்கோட்டை மட்டும் அமைந்துள்ள இந்தக் கூட்டணி இரு கட்சிகளுக்கும் வாக்குகளை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் தேமுதிக நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications