குறட்டை விடும் குடிநீர் வடிகால் வாரியம்... நிதி நெருக்கடியால் முடங்கிய பணிகள்
சென்னை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மெத்தனமான நடவடிக்கைளால் எதிர்வரும் கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவரித்தாடுமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.
உள்ளாட்சித்துறையின் கீழ் வரும் இந்த வாரியத்தில் இப்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மாவட்டங்களில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், செக் டேம்கள் கட்டும் பணிகள் முடங்கியுள்ளன.
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் விவகாரத்தில் அலட்சியமின்றி அதிகாரிகளும், அந்த துறையின் அமைச்சரும் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

நேரடி தொடர்பு
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் என்பது கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டு உள்ளாட்சித்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் ஒரு அமைப்பாகும். இந்த வாரியத்திற்கென தனி இயக்குநர் பணியமர்த்தப்பட்டு குடிநீர் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை எழிலகம் வளாகத்தை ஒட்டியுள்ள கட்டிடத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு தான் தலைமை பொறியாளர், நிதி இயக்குநர், மேலாண் இயக்குநர் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

தவிப்பு
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஏற்கனவே ஒப்பந்த பணிகள் முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு அதற்கான பணம் சென்று சேரவில்லை. புதிதாகவும் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்ட வாரியம் ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே மெயிண்டெனன்ஸ் எனப்படும் பராமரிப்பு பிரிவில் மட்டும் அவ்வப்போது சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான தொகைகள் உடனடியாக கொடுக்கப்படுகின்றன. மற்றபடி மற்ற ஒப்பந்தபணிகளை முடித்துவிட்டு அதற்கான பணத்தை பெற ஒப்பந்ததாரர்கள் மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

தயக்கம்
குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த பணிகள் எடுத்து செய்தால் பணம் வராது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், ஒப்பந்ததாரர்களும் முன்பை போல் பணிகள் எடுக்க ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே ஒரு சிலர் வந்தாலும் அங்கே.. இங்கே.. என பங்கு பிரித்துக்கொடுத்து கைக்கு வருவது முதலுக்கே மோசம் என்ற சூழல் தான் நிலவுகிறது. இப்படி பல காரணங்களால் குடிநீர் வடிகால் வாரியம் நாளுக்கு நாள் தனது பெருமையை இழந்து வருகிறது. ஒரு காலத்தில் அதிகம் நிதி புலங்கிய வாரியமாக திகழ்ந்த குடிநீர் வடிகால் வாரியம் இன்று படிப்படியாக முடங்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

குடிநீர் தட்டுப்பாடு
இப்போது மார்ச் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் மூன்று மாதங்கள் கோடைக்காலம் என்பதால் சென்னை, ராமநாதபுரம், உட்பட தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. வரும் முன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோடைக்கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications