தமிழகத்தின் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்யும்.. கடும் கோடைக்கு இடையே, ஒரு குதுகல அறிவிப்பு
சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் புயல் மேற்கு வங்கத்தில் நேற்று, கரையை கடந்த போதிலும், வெப்பச்சலனம் காரணமாக, இந்த மழை பெய்யக்கூடும்.
Recommended Video
தமிழகத்தின், கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அது தெரிவித்துள்ளது.

இதனிடையே வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் ஒரு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: தற்போது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் வீசி வருகிறது. இதன் காரணமாக வேலூர், திருத்தணி, கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இந்த பகுதிகளில் வெப்பநிலையானது 41 டிகிரி வரை உயர்ந்துள்ளது. அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு, வட தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட உயர்ந்து, வெப்ப காற்று வீசக்கூடும்.

கடந்த, 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொருத்தளவில் தென் தமிழகத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications