Weather: ஒரே மாதத்தில் 3வது அட்டாக்.. தமிழ்நாட்டை அடுத்தடுத்து தாக்கும் தாழ்வு பகுதி- என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தாக்கிய நிலையில் மூன்றாவது தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாகிகொண்டு இருக்கிறது.
Recommended Video
கைதேர்ந்த இரண்டு பாக்சர்ஸ்கள் ரிங்கில் மாறி மாறி மோதிக்கொள்ளும் போது கூட இடை இடையே பிரேக் கொடுக்கப்படும். எதிர் வீரர் மோசமாக காயம் பட்டால் டைம் அவுட் கொடுக்கப்படும். ஆனால் வடகிழக்கு பருவமழையோ கொஞ்சம் கூட பிரேக்கே கொடுக்காமல் தமிழ்நாட்டை விடாமல் "பன்ச்" செய்து கொண்டு இருக்கிறது.
ஆம் கொஞ்சம் துணியை காய வைக்காவது டைம் கொடுங்க பாஸ் என்று கெஞ்சும் அளவிற்கும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து கனமழையை அளித்து இருக்கிறது. முன்பெல்லாம் ரெட் அலர்ட் என்றே செய்தியே அபூர்வமாக இருக்கும் நிலையில் இப்போதெல்லாம் ரெட் அலர்ட் செய்தியெல்லாம் தினசரி வரும் கொரோனா அப்டேட் போல.. ஓ அப்படியா என்று கடந்த செல்லும் அளவிற்கு வாடிக்கையாகிவிட்டது... தமிழ்நாட்டில் தொடர் மழை ஒரு அவல நகைச்சுவையாக மாறிக்கொண்டு இருக்கிறது.

என்ன நடக்கிறது
தமிழ்நாட்டில் கடந்த மாதம் கடைசி வாரத்தில் வடகிழக்கு பருவமழையால் கனமழை தொடங்கியது. அதன்பின் வழக்கம் போல ஒரு புயலாவது தாக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை தமிழ்நாட்டை புயல் எதுவும் தாக்கவில்லை. ஆம் நம்பமுடிகிறதா? இதுவரை தமிழ்நாட்டை நேரடியாக புயல் எதுவும் தாக்காமலே மாநிலம் முழுக்க மிக கனமழை விடாமல் பெய்து வருகிறது. காரணம் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.

தாழ்வு பகுதி
வங்கக்கடலில் இரண்டு வாரங்களுக்கு முன் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மேற்காக நகர்ந்து தமிழ்நாடு நோக்கி வந்தது. சரியாக சென்னையை குறி வைத்து வந்த தாழ்வு நிலை.. ஆழ்ந்த தாழ்வு நிலையாக மாறாமல் கரையை கடந்தது. சென்னை அருகே காரைக்கல் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது. இதனால் சென்னையில் மிக கனமழை பெய்தது. அதேபோல் வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.

சேதம்
ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறவில்லை என்றாலும் இது சென்னையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. சரி இதோடு முடியும் என்று நினைத்தபோதுதான் இரண்டு நாட்களில் அடுத்த தாழ்வு பகுதிக்கான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. அதன்படி அந்தமான் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடமேற்காக நகர்ந்து தாழ்வு பகுதியாக மாறி தமிழ்நாடு நோக்கி வந்தது.

சென்னைக்கு அருகில்
முதல் தாழ்வு பகுதியை விட இரண்டாவது தாழ்வு பகுதி சென்னைக்கு மிக அருகில் வந்தது. வலுவாகவும் இருந்தது. அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னைக்கும் புதுச்சேரிக்கு இடையில் கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது சென்னையிலும் வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.

இன்னும் போகவில்லை
வட தமிழக கடலோரப் பகுதியில் இது தாழ்வு பகுதியாக வலிமை இழந்து தற்போதும் நிலை கொண்டுள்ளது. அதாவது இன்னும் இதன் பாதிப்பு லேசாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இடைவெளியே விடாமல் அடுத்த தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. வங்கக்கடலில் முதல் தாழ்வு பகுதி உருவான அதே இடத்தில், கிட்டத்தட்ட கொஞ்சம் அதே பாதையில் இந்த தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. ஒரே மாதத்தில் 3வது அட்டாக் இது!

எங்கே
முதலில் தென் மாவட்டங்களை இது தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது இது டெல்டா அருக்கே வந்து அப்படியே டெல்டா முதல் ஸ்ரீஹரிகோட்டா இடையே உள்ள வடமாவட்டங்களில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்றாவது தாழ்வு பகுதியும் மிக தீவிர கனமழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க இயற்கை ஆர்வலர்கள் சொல்லி வரும் காலநிலை மாற்றமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

காரணம்
அடுத்தடுத்து தாழ்வு நிலை உருவாவது காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுவது வழக்கம்தான். ஏன் வடகிழக்கு பருவமழையில் புயல் தாக்குவது கூட தமிழ்நாட்டிற்கு வழக்கம்தான். ஆனால் இப்படி அடுத்தடுத்து மூன்று தாழ்வு நிலை உருவாவது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது.

வெப்பநிலை
கண்டிப்பாக காலநிலை மாற்றம் இதற்கு பின் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. கடல் பரப்பின் மேலே போதிய வெப்பநிலை காணப்படாமல் இப்படி தாழ்வு பகுதி வலுப்பெறாது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட வெப்பநிலை உயர்வும் இந்த தொடர் தாழ்வு பகுதி உருவாக்கத்திற்கும், அது வலுப்பெறுவும் காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது வெப்பநிலை உயர்வு கடல் பகுதியில் புயல் உருவாகும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

பாதிப்பு
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் கண்முன் தெரிய தொடங்கி உள்ளது. ஒடிசாவில் அடிக்கடி எப்படி புயல் தாக்குமோ அப்படி வங்கக்கடல் அருகே உள்ள தமிழ்நாட்டிலும் இனி வரும் காலங்களில் வானிலை மாற்றங்கள் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. புதிய காலநிலைக்கு, மழை அளவிற்கும் ஏற்றபடி தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இப்போது தமிழ்நாடு உள்ளது.












Click it and Unblock the Notifications