தீபாவளிக்கு முன்பே சங்கு சக்கரமா? அதுவும் வங்க கடலிலா? சூசகமானாலும் வெதர்மேன் போட்ட சூப்பர் போஸ்ட்
சென்னை: சென்னையில் இனி வரும் நாட்களில் விட்டுவிட்டு காலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: எதிர்பார்த்தது போல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இனி வரும் நாட்களில் மழை விட்டு விட்டு பெய்யும். இன்று தமிழகத்தின் மேற்கு உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.
அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், தேனி, விருதுநகர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும். அது போல் சேலம், நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

தென் கிழக்கு பகுதி
சென்னையில் தென் கிழக்கு பகுதி முதல் திடீர் திடீரென மழை இரவு மற்றும் காலை நேரங்களில் பெய்யும். 15 ஆம் தேதி முதல் கிழக்கத்திய காற்று வீசுவது தொடங்கும். இதனால் அடுத்த 10 நாட்களில் வங்கக் கடலில் காற்றழுத்தம் (சங்கு சக்கரம்) உருவாகும். இனி வரும் நாட்கள் சுவாரஸ்யமானவை என கூறியுள்ளார் வெதர்மேன். தெற்கு வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் கனமழை
இன்றைய தினம் சென்னையின் முகப்பேர், அம்பத்தூர், அண்ணாநகர், கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இது போல் நேற்று முன் தினம் இரவு கூட கனமழை பெய்தது. இதனால் சென்னையில் கடந்த இரு தினங்களாக குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது.

4ஆவது வாரம் வடகிழக்கு பருவமழை
அக்டபோபர் 4 ஆவது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதாவது அக்டோபர் 2வது வாரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரு வாரங்கள் தாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சொல்லப்பட்டது. சென்னையில் மழைக்காலம் என்றாலே சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருக்கும். ஆனால் தற்போது மழை நீர் வடிகால்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

பொதுமக்கள் குற்றச்சாட்டு
இதனால் வரும் பருவமழையின் போது தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் சில பகுதிகளில் தற்போது இரு தினங்கள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளதாக நெட்டிசன்கள் புகைப்படம் எடுத்து புகார்களை கூறி வருகிறார்கள்.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications