தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஏன்.. அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழை பெய்யும்.. வெதர்மேன்
சென்னை: சென்னையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை முதல் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் சென்னையில் இரவு முதல் விடியற்காலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அது போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு வெதர்மேன்
இந்த நிலையில் இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது வலைதள பக்கத்தில் கூறுகையில், தமிழக கடலோரத்தின் தென் மேற்கு பகுதியில் தென்மேற்கு பருவமழை காலமான (ஜூன் - செப்டம்பர் வரை) வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல இடங்களில் வெப்பசலனத்தால் மழை பெய்கிறது. வெப்பம்தான் மழையை தூண்டிவிடுகிறது.

வளி மண்டல மேலடுக்கு
எனினும் காற்றும் உருவாகி வளி மண்டல மேலடுக்கு சுழற்சிக்கு உதவி வருகிறது. கிழக்கிலிருந்து காற்று வீசுவதால் கடலோர பகுதிகளில் புயல் காற்று உருவாகிறது. அந்த காற்று எந்த பகுதிகளில் குறைந்த வேகத்தில் நகர்கிறதோ அந்த இடங்களில் மழையை கொடுக்கிறது. இந்த நிலையில் இன்றைய தினம் திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கரூர், மதுரை, கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் மழை பெய்யும்.

சென்னையில் மழை
அது போல் தென் தமிழகத்தில் உள்ள நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யும். இன்று காலையில் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அது போல் சென்னையின் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நீர் நிலைகள்
நாளையும் நாளை மறுநாளும் அதாவது ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் சென்னையில் மழை பெய்யும். இது மேற்கத்திய காற்று திரும்பும் வரை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்றே பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரு தினங்களுக்கு மழை அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வரை பெய்த மழையால் சென்னையில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன.












Click it and Unblock the Notifications