வேகமாக நிரம்பி வரும் ஈசிஆர், ஓஎம்ஆர், தாம்பரம் ஏரிகள்..இன்றும் பிச்சி உதறும் மழை..தமிழ்நாடு வெதர்மேன
சென்னை: கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் பெரும்பாலானவை நிரம்பிவிட்டன என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.
நவம்பர் 30, டிச.1, டிச.2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை இருக்கும் என வானிலை மையங்கள் அறிவித்தன. அது போல் நேற்று முன் தினம் இரவு மழை கொட்டி தீர்த்தது.

விடியற்காலை
இந்த நிலையில் நேற்று மாலை முதலே ஒரு மணி நேரத்திற்கு ஒரு மழை சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. பின்னர் இரவு முதல் விடியற்காலை வரை அடை மழை பெய்தது.

வெறிச்சோடி
இன்னும் சில பகுதிகளில் பிசுபிசுவென தூறல் போட்டு வருகிறது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலைகள் வெறிச் சோடி காணப்படுகின்றன. எனினும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வோர் மேடு பள்ளம் தெரியாமல் அவதிப்படுகின்றனர்.

கனஅடி
சென்னையில் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நாளில் 100 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்துவிட்டது. இதனால் நீர் இருப்பு 649 மில்லியன் கனஅடியிலிருந்து 749 மில்லியன் கனஅடியாக உயர்ந்துவிட்டது.

வச்சு செய்த மழை
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை இன்றும் வச்சு செய்யும்.

ஏரிகள் குறித்து கவனம் தேவை
கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் பெரும்பாலானவை நிரம்பிவிட்டதாக கேள்விப்பட்டேன். இன்றும் கனமழை தொடரும் என்பதால் ஏரிகள் குறித்து கவனம் தேவை என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications