திடீரென கொட்டிய மழை.. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கும் தொடரும்! இந்திய வானிலை மையம் ஹேப்பி நியூஸ்
சென்னை: தலைநகர் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்து 5 நாட்களுக்குக் கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடை வெப்பம் உச்சத்தில் இருந்தது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டில் வெப்பம் மிக மிக மோசமாக இருந்தது. பல நாட்கள் தொடர்ச்சியாக 100+ டிகிரி வெப்பம் பதிவானது.
இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே கூட செல்ல முடியாத ஒரு சூழலே நிலவியது. இதன் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மழை: வழக்கமாக மே மாதம் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு ஜூன் மாதம் கூட வெப்பம் மோசமாகவே இருந்தது. தொடர்ச்சியாக வெப்பம் 100 டிகிரியை தாண்டியது. இதற்கிடையே சில நாட்களாக வெப்பம் குறைந்து வந்தது. இந்தச் சூழலில் நேற்று நள்ளிரவு முதல் தலைநகர் சென்னையில் திடீரென கனமழை கொட்ட ஆரம்பித்தது. பல இடங்களில் மழை வைத்துச் செய்துவிட்டது.
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, கிண்டி, அடையாறு என நகரில் பல இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. சென்னையில் பெய்த இந்த கனமழை பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. கனமழை கொட்டியதால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கின.
இதனால் வாகன ஓட்டிகள் வண்டிகளை ஓட்டவே சிரமப்பட்டனர். மேலும், இந்த மழை காரணமாக சில இடங்களில் மழையும் விழுந்தன. மழை தொடர்பாக இதுவரை சுமார் 176 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளன.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 14 செமீ, தரமணியில் 12 செமீ, நுங்கம்பாக்கம் 6.7 மழைப் பதிவாகியிருக்கிறது. கனமழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரும் நாட்களில் தமிழ்நாட்டில் என்ன மாதிரியான வானிலை இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

இந்திய வானிலை மையம்: தென் இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய பரவலாக லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஜூன் 19 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரும் என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ராஜஸ்தான், கடலோர கர்நாடகா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கும் தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் தொடர்ச்சியாக வெப்பம் கொளுத்தி வந்த நிலையில், இந்த திடீர் மழை மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications