அடிதூள்.! தமிழ்நாட்டிற்கு வரும் அடுத்த வந்தே பாரத்.! சென்னை-கோவைக்கு அடுத்து எந்த ரூட்டில் தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்து எந்த ரூட்டில் வந்தே பாரத் இயக்கப்படும் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகில் மிகவும் விரிவான ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இடையே ரயில் சேவை இருக்கிறது.

இருப்பினும், வேகம், அதி நவீன வசதிகளில் இந்திய ரயில்வே பின்தங்கி இருப்பதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்திய ரயில்வே இயக்கிய அதிநவீன ரயில்கள் தான் வந்தே பாரத் ரயில்.
வந்தே பாரத்: முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பலூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது மற்றொரு சிறப்பாகும். கடந்த 2019ஆம் ஆண்டில் டெல்லி- கான்பூர்- அலகாபாத்- வாரணாசி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை முதலில் இயக்கப்பட்டது.
அதன் பிறகு இது பல்வேறு வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நாடு முழுக்க 15க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து விரைவில் நாடு முழுக்க 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே ரயில்வே துறையின் திட்டமாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் வந்தே பாரத்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலில் சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டது. அதேபோல தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட்ட முதல் வந்தே பாரத் என்றால் அது சென்னை- கோவை வந்தே பாரத் தான். இதனைக் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதற்குப் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை அனைத்து நாட்களிலும் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தே இருந்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்து எந்த ரூட்டில் வந்தே பாரத் இயக்கப்படும் என்பது குறித்த தகவல்களை அமைச்சர் எல் முருகன் பகிர்ந்துள்ளார்.
எல் முருகன்: குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும் நிகழ்வின் தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் எல் முருகன், "தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு ரயில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மட்டும் மத்திய அரசு ரூ.6,080 கோடியை மத்திய அரசு நிதியாக ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் 73 ரயில்வே ஸ்டேஷன்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். குறிப்பாக மதுரை ரயில் நிலையத்திற்கு மட்டும் இதற்காக ரூ.413 கோடி ஒதுக்கியுள்ளோம். இது மட்டுமின்றி தமிழ்நாட்டில் பழனி - ஈரோடு உள்ளிட்ட ஒன்பது புதிய ரயில் பாதை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
அடுத்து எந்த ரூட்: மேலும், சென்னை -நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். சென்னை- நெல்லை வந்தே பாரத் குறித்துக் கடந்த சில காலமாகவே தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கான சோதனை ஓட்டம் விரைவில் தொடங்க உள்ளதாகவே தெரிகிறது. ஓரிரு மாதங்களில் இந்த ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரையில் நின்று செல்ல வாய்ப்பு இருக்கிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் இயக்கப்பட்டால் அது பயண நேரத்தை வெகுவாக குறைக்கும்.. மேலும், மக்களுக்கும் இது பெரியளவில் உதவும்.












Click it and Unblock the Notifications