10.5% உள் ஒதுக்கீட்டிற்கு... ராமதாஸ் காரணம் என்பது பொய்.. வெளுத்து வாங்கும் வேல்முருகன்
சென்னை: வன்னியர் சமுதாய மக்களுக்காக தாம் மட்டுமே குரல் கொடுப்பது போன்ற மாய பிம்பத்தைக் கட்டமைக்க ராமதாஸ் முயல்கிறார் என்றும் 20% இட ஒதுக்கீட்டை எடப்பாடி அரசுடன் இணைந்து 10.5% ராமதாஸ் குறைத்துவிட்டார் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் திமுகவும், அதிமுகவும் மும்முராக ஈடுபட்டு வருகிறது. திமுக தரப்பில் இதுவரை இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மமக ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. இந்தச் சூழ்நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தன்னலம் பார்க்காமல் உழைத்தவர்
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், "வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடியவர் வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் ராமமூர்த்தி. பல ஆண்டுகளாக வன்னியர் சமூகத்திற்காகத் தன்னலம் பார்க்காமல் உழைத்தவர் ராமமூர்த்தி. அப்படிப்பட்ட நபர் திமுகவுக்கு விலை போகிவிட்டார் என்ற குற்றச்சாட்டைச் சுமத்துகிறார். அவரை டாக்டர் ராமதாஸ் நாய் என்று வசைபாடுகிறார். கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களையும் ஒருமையில் பேசியுள்ளார் ராமதாஸ்.
10.5%ஆக குறைத்து விட்டனர்
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 15% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர் சி.என் ராமமூர்த்தி. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை அறிவுறுத்தியது. ஆனால், எடப்பாடியும் ராமதாசும் தேர்தலுக்காகப் பொய் ஒப்பந்தம் போட்டு அதை 10.05 சதவீதமாகக் குறைத்துவிட்டார்" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார்.
மாய பிம்பம்
மேலும், வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக ஏராளமான வன்னியச் சங்கங்கள் போராடி வருகின்றன என்றும் இருப்பினும், வன்னியர் சமுதாய மக்களுக்காகத் தாம் மட்டுமே குரல் கொடுப்பது போன்ற மாய பிம்பத்தைக் கட்டமைக்க ராமதாஸ் முயல்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். தமிழக அரசுக் கல்வி, வேலை வாய்ப்பு 10.5% இட ஒதுக்கீடு பெற்றதற்கு ராமதாஸ்தான் காரணம் என்று உண்மைக்கு மாறாகச் செய்தி பரப்பப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடும்ப சொத்து
தொடர்ந்து பேசிய அவர், "மத்திய அரசில் 2% இட ஒதுக்கீடு மாநிலத்தில் 20% என்பதுதான் ராமதாஸ் உள்ளிட்ட அனைத்து வன்னியச் சங்க தலைவர்களின் கோரிக்கை. அது அப்போது என்ன ஆனது?" என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், வன்னியர் பொதுச்சொத்து நல வாரியத்தின் கீழ் கோனேரிகுப்பத்தில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையைத் தனது குடும்ப சொத்தாக ராமதாஸ் மாற்றிக்கொண்டார் என்றும் குற்றஞ்சாட்டினார்.