ஆரம்பமே இப்படியா.. தவெக புதிய செயலியில் சிக்கல்.. மீட்டிங்கை கடைசி நேரத்தில் ஒத்திவைத்த விஜய்!
சென்னை: சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடக்கவிருந்த அக்கட்சியின் புதிய செயலி அறிமுக கூட்டம் ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தவெகவின் புதிய செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளி வந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு அடுத்த மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாட்டை நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு எடுத்துள்ளார். இதற்கான பணிகளை தவெக நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தவெக செயற்குழு கூட்டத்தில் கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. இதற்காக பிரத்யேக செயலி ஒன்றையும் தவெக தலைமை வடிவமைத்திருப்பதாக கூறப்பட்டது. விரைவில் அதனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக ஜூலை 20ஆம் தேதி தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக தவெக மாவட்டச் செயலாளர்கள் தயாராகி வந்தனர். இந்த கூட்டத்தில் மதுரை மாநாடு ஏற்பாடுகள் மற்றும் விஜயின் சுற்றுப்பயணம் ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட இருந்ததாக கூறப்பட்டது. அதேபோல் மதுரை மாநாட்டில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட வேண்டும், தொண்டர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் சில அறிவுறுத்தல் அளிக்கப்படவிருந்தன.
இதனிடையே மதுரை மாநாட்டில் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட இருந்ததாக கூறப்பட்டது. 120 மாவட்டச் செயலாளர்களில் முதற்கட்டமாக சில நிர்வாகிகளை வேட்பாளர்களை அறிவிக்க விஜய் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை நடக்கவிருந்த தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைமை வடிவமைத்த புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்த பின், அதனை பரிசோதித்துவிட்டு மீண்டும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் தவெக நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications