ஆஹா.. தஞ்சை பெரியக்கோவில்.. சோழ சாம்ராஜ்ஜியத்தை உலகுக்கு சொல்லவில்லையே.. ஆனந்த் மஹிந்திரா வியப்பு
சென்னை: பொன்னியின் செல்வன் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தஞ்சை பெரியக்கோவிலை குறிப்பிட்டு சோழர்களின் சாம்ராஜ்ஜியம் பற்றி உலகுக்கு நாம் தெரியப்படுத்தவில்லை என பிரபல தொழில்அதிபர் ஆனந்த் மஹிந்திரா கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களில் முக்கியமானவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்.
இந்தியாவில் உள்ள திறமைசாலிகளை அவர் அடிக்கடி பாராட்டுவார். மேலும் உலக கண்டுபிடிப்புகள், இந்தியாவின் பாரம்பரியம் சார்ந்த பதிவுகளை அவர் செய்து வருகிறார்.
பிரதமர் மோடி தொடர்பான புகார்.. 6 ஆண்டுகளுக்கு முன் கொடுத்ததாம்.. திடீரென ஆக்ஷனில் குதித்த போலீஸ்!
பெரியக்கோவில் பெருமை வீடியோ
இந்நிலையில் தான் தற்போது ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவில் தஞ்சை பெரியக்கோவிலின் கட்டடக்கலை சிறப்புகளை இண்டீரியர் டிசைனர் ஸ்ரவண்யா ராவ் பிட்டி பேசுகிறார். தஞ்சை பெரிய கோவிலுக்கு நேரடியாக சென்று அவர் அதனை விளக்கி உள்ளார். இந்த வீடியோவில் ஸ்ரவண்யா ராவ் பிட்டி கூறியதாவது:
11ம் நூற்றாண்டு கோவில்
‛‛தஞ்சை பெரியக்கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சோழ கால இந்த பிரகதீஸ்வரர் கோவிலில் நாம் உள்ளோம். ராஜ ராஜ சோழன் கட்டிய கோயில் இது. இந்த கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக உள்ளது. கோவில் கோபுரத்தின் மத்தியில் உள்ள கல் 80 டன் எடை கொண்டது. கோவில் வளாகத்தை பற்றி கூற வேண்டுமானால் 200 தாஜ்மஹாலை அமைக்க முடியும்.
ஆறு பூகம்பங்களை தாங்கி..
முன்காலத்தில் எந்தவித இயந்திரமும் இல்லை. இருப்பினும் கோவில் எப்படி கட்டப்பட்டது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கான பதில் என்பது கோவில் கோபுர கட்டுமானத்துக்காக கோவிலை சுற்றி 6 கிலோ மீட்டருக்கு சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிக்காக மனிதர்களுடன் குதிரைகள், யானைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் கோவில் கட்டுவதற்கான திட்டத்தை படமாக வரைந்து அதன்படி கட்டமைத்துள்ளனர். பேரண்டத்தின் இடது டூ வலது குறித்து இந்த கோவில் பேசுகிறது. ஆறு பூகம்பங்களை தாங்கி நிற்கிறது'' என்று பெருமையுடன் கூறுகிறார்.
வியப்பு கலந்த கவலை
இந்த வீடியோவின் பதிவில் ஆனந்த் மஹிந்திரா, ‛‛வடிவமைப்பாளர் ஸ்ரவண்யா ராவ் அற்புதமான தகவல்களை வழங்கியுள்ளார். சோழ சாம்ராஜ்ஜியம் எவ்வளவு சக்தி வாய்ந்தது, தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு முன்னேறியது என்பதை நாம் உண்மையில் உள்வாங்கி கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இதன் வரலாற்று முக்கியத்துவத்தை உலகிற்கு நாம் உரக்க சொல்லவில்லை'' என வியப்புடன் கவலையை பகிர்ந்துள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
இதற்கு தற்போது பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தான் சிலர் நாளை வெளியாக உள்ள இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும்படி கூறியுள்ளனர். இந்த படம் சோழ வரலாற்றை கொண்டது என்பதால் சில நெட்டிசன்கள் இப்படி கருத்து தெரிவித்துள்ளனர்.