“தென் கைலாயம்” செல்ல முடியாது.. வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தடை
கோவை: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்துள்ளது. மலைப்பாதைகளில் வழுக்கல் மற்றும் கற்கள் சரியும் அபாயம் இருப்பதால் பக்தர்கள் மலையேற்றம் மேற்கொள்ள வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வெள்ளியங்கிரி மலை, "தென் கைலாயம்" என பக்தர்களால் போற்றப்படும் முக்கிய ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. ஏழு மலைப் பாதைகளைத் தாண்டி அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்க ஆலயத்தை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக மகாசிவராத்திரி காலத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்து மலையேற்றத்தில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மே மாத இறுதி வரை, நீதிமன்ற உத்தரவு மற்றும் வனத்துறையின் கண்காணிப்பின் கீழ் பக்தர்களுக்கு மலையேற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதிகாலை நேரத்தில் மலையுச்சியில் இருந்து உதயமான சூரியனை தரிசிப்பது பக்தர்களுக்கு தனித்துவமான ஆன்மிக அனுபவமாக கருதப்படுகிறது. இதனால், வெள்ளியங்கிரி மலை சிவ பக்தர்களின் முக்கிய யாத்திரை மையமாக மாறியுள்ளது.
இந்நிலையில், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மலைப்பாதைகளில் வழுக்கல் அபாயம், கற்கள் சரிவது உள்ளிட்ட பாதுகாப்பு சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு மாவட்ட நிர்வாகம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை பக்தர்கள் மலையேற்றம் மேற்கொள்ள வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், வானிலை நிலைமை சீராகி, பாதைகள் பாதுகாப்பானதாக உறுதி செய்யப்பட்ட பிறகே மீண்டும் மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications