“பொய் சொல்லாதீங்க.. நியூஸ் பேப்பர்லயே வந்துடுச்சு”.. அமலாக்கத்துறையை கடிந்துகொண்ட நீதிபதிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரிடம், "பொய் சொல்ல வேண்டாம்.. அனைத்தும் செய்தித் தாள்களில் வந்துள்ளது" என நீதிபதிகள் தெரிவித்தனர். "இரவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்" என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறிய நிலையில், பொய் சொல்ல வேண்டாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடந்தபோது, இரவு நேரத்திலும் அதிகாரிகளை வீட்டுக்குச் செல்ல விடாமல் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tasmac high court enforcement directorate

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத் துறை இதுபோல சோதனை நடத்தியது. மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு அனுமதி பெற்று தான் சோதனை நடத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல் பொத்தாம் பொதுவாக கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும், அதனை திருத்தம் செய்து புதிய மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, "சோதனை நடத்தும்போது, அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். எந்த தகவலும் தெரிவிக்காமல் அலுவலகத்துக்குள் நுழைந்து அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும், "60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்க துறையினர் சிறை பிடித்தனர். இது அதிகாரிகளின் தனிநபர் சுதந்திரத்துக்கு விரோதமானது என வாதம் வைத்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், "பெண் அதிகாரிகளை காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர். அதிகாலை 1 மணிக்கு சிலரை வெளியில் செல்ல அனுமதித்து விட்டு காலை 8 மணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், டாஸ்மாக் அலுவலகம் சென்றதற்கான காரணங்களை அமலாக்கத் துறை தெரிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்து, இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது என அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினர்.

இதனை மறுத்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "இரவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்" என விளக்கமளித்தார்.

அதற்கு, "பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது" எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை தனது அதிகாரத்தை செயல்படுத்திய விதத்தை தான் கேள்வி எழுப்புகிறோம் எனக் கூறி, அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்ட ஐகோர்ட் நீதிபதிகள், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்க துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+