வழக்கை மாற்றிய வாதம்.. விடாமல் நடந்த சட்ட போராட்டம்.. டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய தமிழக அரசு!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசின் சட்ட போராட்டத்திற்கு இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் முதல்நாள் வசூல் 170 கோடியை தாண்டியது. தமிழகம் முழுக்க டாஸ்மாக்கில் குடிமகன்கள் பலர் வயது வித்தியாசமின்றி டாஸ்மாக் சென்றனர்.
சரியாக சமூக இடைவெளி இல்லாமல், முகத்தில் மாஸ்க் கூட அணியாமல் வரிசையில் நின்றார்கள். முண்டி அடித்துக்கொண்டு கூட்டத்தில் மது வாங்கினார்கள். டாஸ்மாக் காரணமாக கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஹைகோர்ட் உத்தரவு
இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 17ம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்கள் நீதி மய்யம் மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோர் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வில்லை என்று கூறி தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.கொரோனா பரவும் அச்சம் உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடனே எதிர்ப்பு
ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்தது. முதலில் இந்த மனுவில் பிழைகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று நடந்த விசாரணையின் முடிவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டம் வெற்றி
தமிழக அரசின் சட்ட போராட்டத்திற்கு இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் சிவப்பு மண்லடங்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் 20 ஆயிரத்துக்கும் அதிகமான கேஸ்கள் இருக்கும் மகாராஷ்டிராவில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்று கேள்விகள் வைக்கப்பட்டது.

வாதம் வைத்தது
இந்த வழக்கிற்காக தமிழக அரசு முக்கியமான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் இன்று வைத்தது. அதில்,
- தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் போதிய இடைவெளி பின்பற்றப்பட்டது.
- மக்களுக்குள் சமூக இடைவெளி விடப்பட்டது.
- பொருளாதார தேவைக்காக மதுக்கடைகளை திறப்பது அவசியம்.
- மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. (இதுதான் இந்த வழக்கின் போக்கை மாற்றியது )
- அனைத்து விதிகளும் இதில் பின்பற்றப்பட்டுள்ளது.
- கட்டுப்பாட்டு பகுதிகளிலும், சென்னையிலும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்று வாதம் வைக்கப்பட்டது.

வெற்றி கிடைத்துள்ளது
இப்படி முக்கியமான விஷயங்களை வாதமாக வைத்தது தமிழக அரசுக்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக சட்ட ரீதியான வெற்றி என்பதை விட அரசியல் ரீதியான வெற்றியாக பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் இந்த வழக்கு காரணமாக பெரிய அளவில் ஸ்கோர் செய்தது. சமூக வலைத்தளங்களில் ரீச் ஆனது. அதேபோல் ரஜினிகாந்தும் கூட அரசுக்கு அறிவுரை சொல்லும் நிலை ஏற்பட்டது. இதை எல்லாம் எதிர்த்து தமிழக அரசு சட்டம் மூலம் வென்று இருக்கிறது.

மிக முக்கியம்
இது டாஸ்மாக் வழக்கு என்பதை விட, அரசியல் ரீதியாக இந்த வழக்கு முதல்வர் பழனிசாமிக்கு மிக முக்கியமானது. அவர் வெளியிட்ட உத்தரவை எதிர்த்து ஒருவர் ஹைகோர்ட் சென்று தடை வாங்குவது அரசியல் ரீதியாக முதல்வருக்கு பின்னடைவாக பார்க்கப்படும். இதனால் எப்படியாவது இந்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அல்லது இடைக்கால தடை வாங்க வேண்டும் என்று முதல்வர் உறுதியாக இருந்தார். தன்னுடைய பலத்தை நிரூபிக்க அவருக்கு இது சரியான வாய்ப்பாக இருந்தது.

ரஜினி அறிவுரை
ரஜினி உள்ளிட்டவர்கள் அறிவுரை சொன்னதும், திமுக இதை வைத்து எதிர்ப்பு பிரச்சாரம் செய்தது அதிமுகவிற்கு பெரிய அழுத்தமாக மாறியது. மது நல்லதா கெட்டதா என்ற விவாதத்தை ஒதுக்கிவைத்து பார்த்தால், இந்த வழக்கு அதிமுகவிற்கும் முதல்வருக்கும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அதனால்தான் இதில் தீவிரமாக கவனம் செலுத்தப்பட்டது. உடனே மேல்முறையீடு செய்யப்பட்டது. மக்கள் மத்தியில் முதல்வர் பழனிசாமி உருவாக்கி இருக்கும் இமேஜை இந்த வழக்கின் முதல் வெற்றி உறுதி படுத்தி உள்ளது.

இமேஜ் அரசியல்
இமேஜ் அரசியலில் முதல்வர் பழனிச்சாமி பெரிய அளவில் கவனம் செலுத்துகிறார். விடா முயற்சிக்கு சொந்தக்காரர் என்ற பெயர் முதல்வருக்கு இருக்கிறது. சென்னை ஹைகோர்ட்டின் தடை அவரின் இமேஜுக்கு எதிராக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது விடாமல் முயற்சி செய்து, தாங்கள் டாஸ்மாக் திறந்தது தவறு இல்லை. மற்ற மாநிலங்களிலும் திறந்து இருக்கிறார்கள் என்று நிரூபித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி. மது நல்லதோ..கெட்டதோ அரசியல் ரீதியாக முதல்வர் பழனிசாமி செய்த இந்த சட்ட போராட்டம் அவரின் ஆளுமையை நிரூபிக்கிறது.












Click it and Unblock the Notifications