டாஸ்மாக்கில் அதிரடி.. சென்னை மந்தைவெளி பஸ் ஸ்டாண்டுக்கே போயிட்டாங்க ராஜேஸ்வரி பிரியா.. கவனித்த திமுக
சென்னை: மது மற்றும் போதைப் பொருட்கள் பழக்கத்தினால் நம் சமூகம் சீரழிவதனை தடுக்க மக்கள் எழுச்சியுடன் முன்வர வேண்டும்" என்று ராஜேஸ்வரி பிரியா கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் மந்தைவெளி சம்பவத்தையும் அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரி வருகின்றன.. அதேபோல, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் மதுவிலக்கை கொண்டு வர குரல் கொடுத்து வருகின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மது ஒழிப்பு மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக மாநாடு அறிவித்துள்ளார்.. அத்துடன், அம்மாநாட்டிற்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மந்தைவெளி: இப்படி நாலாபுறமும் எதிர்ப்பு கிளம்பி வரும்நிலையில், சென்னையில் மந்தைவெளி பஸ் ஸ்டாண்டு பஸ் நிலையம் அருகே, புதிதாக டாஸ்மாக் கடை துவக்கப்பட்டுள்ளது.. இந்த கடையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்கள், இதைக்கண்டு அதிர்ச்சியில், திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக டாஸ்மாக் கடையை தங்கள் பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அதேபோல, அப்பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதில் இணைந்து, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.. இதனால், சம்பவ இடத்திற்கு வந்த அபிராமபுரம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மதுக்கடைகள்: கடந்த வருடம் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகளில், 500 கடைகள் கண்டறியப்பட்டு படிப்படியாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது புதுசு புதுசாக திறக்கப்பட்டு வருவது ஏன்? என்றும் பெண்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், மந்தைவெளியில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
ஆர்ப்பாட்டம்: "டாஸ்மாக்குக்கு எதிராக சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே புதிதாக திறக்கபட்ட டாஸ்மாக் கடையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கையாண்ட விதம் மிகவும் மோசமானது ஆகும். போராட்டத்தி்ல் ஈடுபட்ட பெண்களை தர தரவென்று இழுத்து வரும் விதம் காவல்துறையினர் மீது உள்ள மதிப்பினை குறைக்கிறது.
அவர்கள் என்ன தேச துரோகம் செய்தவர்களா? அல்லது போதைப் பொருள் கடத்தியவர்களா? பேருந்து நிலையத்தில் டாஸ்மாக் இருந்தால் போதை நிலையில் உள்ள கூட்டத்துடன் எப்படி பெண்களும் மாணவிகளும் பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியும். ஆட்சியாளர்கள் மக்களைபற்றி கவலை எதுவும் கொள்ளாமல் டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க வைப்பதனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்குவது நியாயமா?
சீரழிவு: திறந்து மூடும் நேரம் (மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை)என்பதெல்லாம் எந்த டாஸ்மாக் கடைகளிலும் பின்பற்றப்படுவதில்லை. 24 மணி நேரமும் கள்ளத்தனமாக விலையை அதிகப்படுத்தி வியாபாரம் நடந்த வண்ணம் இருக்கிறது. இதனை கூட தடுக்க முடியாதவர்களிடம் மது விலக்கு கோரிக்கை வைப்பது நமது தலைவிதி என்றே தோன்றுகிறது. மது மற்றும் போதைப் பொருட்கள் பழக்கத்தினால் நம் சமூகம் சீரழிவதனை தடுக்க மக்கள் எழுச்சியுடன் முன்வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications