டாஸ்மாக் கடையில் கட்டுப்பாடு தேவை! குடிநோயாளிகளை குறைக்கணும்! ராஜேஸ்வரி பிரியா தரும் புது ஐடியா!
சென்னை: டாஸ்மாக் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை டாஸ்மாக் நிர்வாகத்துடன் இணைத்து மது விற்பனையை கட்டுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி ஏன் ஆணையிட கூடாது?என அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா வினவியுள்ளார்.
தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளதாக 2 வருடங்களுக்கு முன்பு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தற்போது மது குறித்து வாய் திறந்து பேசுவதே இல்லை என சாடியுள்ளார்.
இது தொடர்பாக ராஜேஸ்வரி பிரியா விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;
அடிமடியிலேயே கை வைத்த டாஸ்மாக் ஊழியர்கள்.. அதிக ரேட்டுக்கு சேல்ஸ்.. 852 பேர் சஸ்பெண்ட்
செந்தில்பாலாஜிக்கு கேள்வி
ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டுமென்று கூறும் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை டாஸ்மாக் நிர்வாகத்துடன் இணைத்து மது விற்பனையை கட்டுபடுத்த வேண்டும் என்று ஏன் ஆணையிட கூடாது? ரேஷன் கடை பொருட்கள் ஒரு குடும்பத்திற்கு இவ்வளவு என்று அளவு நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறது அரசு. அதே அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் ஒருவர் பெட்டி பெட்டியாக கூட மது பாட்டில்களை வாங்கலாம் என நிர்வாகம் செய்து வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் குழு
இன்னும் கொடுமை என்னவென்றால் வியாபாரம் குறையும் டாஸ்மாக் கடைகளில் குழு அமைத்து வியாபாரத்தை அதிகரிக்க திட்டமிடப்படுகிறது.
குடி நோயாளிகள் அதிகரித்து கொண்டே செல்கிறார்கள். அது குறித்து அரசுக்கு எந்தவித கவலையும் இல்லை.அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வேலைக்கு செல்கிறார்கள் அந்த சம்பளத்தையும் மதுவிற்கே செலவிடுகிறார்கள் பல குடும்பங்கள் சீரழிந்து பிள்ளைகள் படிக்க முடியாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அளவான விற்பனை
வட மாநிலத்தவர் தமிழகத்திற்கு அதிகமாக வர காரணமே மது அடிமைகள் தமிழகத்தில் அதிகமானதுதான். கட்டிட வேலை,உணவக வேலை என அன்றாட வேலை பார்க்க இங்கே ஆட்கள் இல்லை காரணம் மதுவே. இதனை ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதே இல்லை. அரசு ஏன் டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்பதற்கு விளக்கம் தர முடியுமா?ஒரு வேளை கட்டுபாடுகள் விதித்து அளவான விற்பனை செய்வதற்காகதான் அரசே நடத்துகிறோம் என்றால் கூட ஏற்கலாம்.
இளம் விதவைகள்
ஆனால் அதிக வருமானம் கிடைக்கிறது நாளுக்கு நாள் வருமானம் பெருகுகிறது.குடிக்க வைத்து குடும்பங்களை அழிப்பதில் அரசுக்கு பெருமையாக இருக்கிறது என்றா கூற முடியும்? தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தற்போது மது குறித்து வாய் திறந்து பேசுவதே இல்லை. ஒரு நபருக்கு இத்தனை மது பாட்டில்கள்தான் வாங்க முடியும் என்று நிர்ணயிப்பது குடி நோயாளிகள் அதிகமாவதை தடுப்பதற்கான சிறந்த வழியாக அமையும்.