போராட்ட களமான டாஸ்மாக் கடைகள்-முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை படங்களை ஒட்டி பாஜக- திமுக போட்டி போராட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு மதுபான நிறுவனமான டாஸ்மாக் நடத்தும் மதுபான கடைகள் முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தை பாஜகவினர் மேற்கொண்டனர்; இதற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படத்தை ஒட்டினர். இதனால் தமிழக டாஸ்மாக் கடைகள் போராட்ட களமாகின.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான கொள்முதல், விற்பனையில் முறைகேடு நடப்பதாக கூறி மதுவிற்பனை கடைகள் முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனையடுத்து தமிழ்நாட்டின் பல டாஸ்மாக் மதுபான கடைகள் முன்பாக பாஜகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டினர். டாஸ்மாக் கடைகள் முன்பு முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டியதாக பாஜகவினர் ஆங்காங்கே கைதும் செய்யப்பட்டனர்.

பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் அதே டாஸ்மாக் கடைகளில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாட்டையால் அடித்துக் கொள்ளும் படத்துடன், இந்த கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை என்ற வாசகத்துடன் போட்டோக்களை ஒட்டினர். இதனால் டாஸ்மாக் கடைகள் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பொது கழிப்பிடங்களிலும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் படங்களையும் திமுகவினர் ஒட்டினர்.
டாஸ்மாக் விவகாரம் என்ன?
தமிழ்நாட்டில் மதுவிற்பனையை அரசு நிறுவனமான டாஸ்மாக் மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் மது கொள்முதல், விற்பனையில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்துள்ளது என்பது அமலாக்கத்துறையின் புகார். டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இந்த அறிக்கையை வெளியிட்டனர். ஆனால் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இதனை திட்டவட்டமாக மறுத்தார். தமிழ்நாடு பாஜகவோ, ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. இதற்கு பதிலடியாக தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினரும் போட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எச்.ராஜா கண்டனம்
டாஸ்மாக் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டியதற்காக பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எச்.ராஜா தமது எக்ஸ் பக்கத்தில், டாஸ்மாக் அரசு நடத்தும் சாராயக்கடை. அப்படியானால் முதல்வர் தானே owner. பின் முதல்வர் படத்தை அங்கு ஒட்டுவது எப்படி தவறாகும். ஓனர் படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியினரை காவல்துறையினர் தடுப்பது, கைது செய்வது அராஜகத்தின் உச்சம். இதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications