டாஸ்மாக் கடைகளில் ரூ.20 ஜாஸ்தி? இதையும் விட்டுவைக்காத ராஜேஸ்வரி பிரியா.. தமிழக அரசுக்கு போன மேட்டர்
சென்னை: டாஸ்மாக் நிர்வாகத்தில் நிலவும் சட்டவிரோத செயல்கள் குறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறது.
நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை, "மதுவிலக்கு" என்பது கனவாகவே கலைந்து, காற்றிலும் கரைந்துப்போய்விட்டது.. அதேசமயம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழக அரசுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டி கொண்டிருக்கிறது.. மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

மதுபானங்கள்: இப்போதைக்கு மாநிலத்தில் மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.
இதில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.. இதனை தடுப்பதற்காகத்தான், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுக்கடைகள் முன்பு "விலை பட்டியல்" நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடைகளில் அதனை அமல்படுத்தாமல் இருப்பதாகவும், ஆங்காங்கே 10 ரூபாயை கூடுதலாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் வசூலித்து கொண்டேயிருப்பதாகவும் மதுப்பிரியர்கள் நொந்து போய் சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா முக்கியமான கோரிக்கையை வைத்திருக்கிறார்..
ராஜேஸ்வரி பிரியா: மதுவால் சீரழிந்து வரும் அவலம் குறித்து, இன்றைய இளைஞர்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்து வருபவர் ராஜேஸ்வரி பிரியா. சமீபத்தில் லியோ படத்தில் விஜய் பாடிய "நா ரெடி" பாடலை கடுமையாக விமர்சித்திருந்த ராஜேஸ்வரி பிரியா, அந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ராஜேஸ்வரி பிரியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ளதாவது: "மதுவினால் ஏற்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் அதனை கட்டுபடுத்த வேண்டிய அரசு அதற்கு மாறாக மதுவிற்பனை குறைந்த சில டாஸ்மாக் கடைகளில் ஏன் குறைந்தது என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புவதோடு மட்டுமில்லாமல் அதிகப்படுத்துவதற்கான நுட்பங்களை கையாண்டு வருவது மிகவும் மோசமான செயல் ஆகும். தமிழகம் முழுவதும் 24 மணிநேரமும் எல்லா இடங்களிலும் மது விற்பனை நடந்து கொண்டிருப்பது மக்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் அதிகாரிகளுக்கும் ஆளுங்கட்சியினருக்கும் மட்டும் தெரியாது என்பது வியப்பாக உள்ளது.
சட்டவிரோத செயல்: அரசு நடத்தும் டாஸ்மாக் நிர்வாகத்தில் MRP க்கு மேல் 10ரூ 20ரூ...,பெட்டி கடை உட்பட பல்வேறு கள்ள சந்தையில் மது விற்பனை என ஏராளமான சட்ட விரோத செயல்களுடன் செயல்பட்டு வருவதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
திமுக அரசு மீதான குறைகளை அடிக்கடி வெளிப்படுத்தியும், அவைகளை தொடர்ந்து விமர்சித்தும் வருபவர் ராஜேஸ்வரி பிரியா. தற்போது டாஸ்மாக் குறித்து வெளியிட்டிருக்கும் இந்த கோரிக்கைககு தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் சொல்லும்போது, "மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்பதற்காகத்தான், கடைகளின் முன்பு விலை பட்டியலை வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. கூடுதலாக விற்கப்படுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.. எனவே, குடிமகன்கள் விலை பட்டியலில் உள்ள பணத்தை மட்டுமே கொடுத்தால் போதும்" என்றனர்...












Click it and Unblock the Notifications