டாஸ்மாக் கடைகளுக்கு இந்த மாதம் 2 நாள் ‘லீவ்’.. சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்!
சென்னை: வரும் ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 100 முதல் 120 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், மதுபானங்களின் விற்பனை சுமார் 200 கோடி ரூபாயை எட்டும்.

டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி போன்ற குறிப்பிடத்தக்க நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு சிறப்பு விடுமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன.
அதுபோக, சில குறிப்பிட்ட நாட்களில் உள்ளூர் விடுமுறைகளும் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஜனவரி மாதம் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருக்கின்றன. திருவள்ளுவர் தினம் ஜனவரி 15 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி சனிக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.
சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வரும் ஜனவரி 15 ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளார் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 15 ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை. அதேபோல, குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதியன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications