தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை எவ்வளவு? வெளிவராத உண்மை
சென்னை: பொதுவாகவே தமிழ்நாட்டில் பொங்கல்பண்டிகையின் போது மதுவிற்பனை மிகமிக அதிகமாகவே இருக்கும். தொடர் விடுமுறை நாட்கள் என்பதாலும், பலரும் சொந்த ஊருக்கு வந்து கொண்டாடுவார்கள் என்பதாலும் விற்பனை அதிகமாக இருப்பது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரூ.454 கோடியே 11 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக டாஸ்மாக் நிர்வாகம் உறுதி செய்யவில்லை..
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் 2,919 டாஸ்மாக் கடைகளில் மது அருந்தும் பார்கள் உள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகளை பொறுத்தவரை தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவிற்கு மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம் என்கிறார்கள். சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், மற்ற பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.

அதன்படி வார இறுதி நாட்கள், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, ஆயுத பூஜை உள்பட பல்வேறு பண்டிகை காலங்களில் மதுவிற்பனை மிக அதிகமாக இருக்கும். இதில் உச்சபட்சம் என்றால் புத்தாண்டில் மதுவிற்பனை மிக அதிகமாக இருக்கும். டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் 2 நாட்கள் ரூ.400 கோடிக்கு மேல் மது விற்பனை இருப்பது வழக்கம். அதேபோல் தீபாவளி பண்டிகையின் போதும், பொங்கல் பண்டிகையின் போதும் மதுவிற்பனை மிக அதிகமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் அந்தந்த பகுதிகளில் மது விற்பனை நிலவரத்தை தெரிவிப்பார்கள் . இதன் காரணமாக புத்தாண்டின் போதும் சரி, பொங்கல் பண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தின் போதும் சரி, டாஸ்மாக் கடைகளில் வசூல் நிலவரம் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த விவாதம் மற்றும் விமர்சனங்கள் ஒரு கட்டத்தில் அரசாங்கத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பண்டிகை நாட்களில் மண்டல வாரியாக மதுவிற்பனை விவரம் வெளியிடப்படுவது இல்லை.. அதன்படி சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை ஆகிய 5 மண்டலங்களில் பொங்கல் பண்டிகையின் போது மது விற்பனை விவரத்தை வெளியாகவில்லை. டாஸ்மாக் தலைமை அலுவலகமும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அதேநேரம் டாஸ்மாக் வட்டாரங்களில் வெளியான தகவலின் படி, பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந்தேதி (போகி) ரூ.185 கோடியே 65 லட்சத்துக்கும், 14-ந்தேதி (பொங்கல் தினத்தில்) ரூ.268 கோடியே 46 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.454 கோடியே 11 லட்சம் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியாக சொல்லப்படுகிறது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் சுமார் ரூ.450 கோடிக்கு மேல் மது விற்பனையாகி இருந்தது என்பதால் இந்த ஆண்டும் அதே அளவுக்கு மதுவிற்பனையாகி இருக்கலாம் என்று கணிப்புகள் உள்ளன. முன்னதாக கடந்த டிசம்பர் 31, ஜனவரி 1-ந்தேதிகளில் சுமார் ரூ.430 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்போதும் மதுவிற்பனை விவரம் வெளியாகவில்லை..












Click it and Unblock the Notifications