அந்த இரண்டு உத்தரவு.. டாஸ்மாக் வெளியிட்ட சுற்றறிக்கை.. ஆடிப்போன ஊழியர்கள்
சென்னை: டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு விற்றால் கண்டிப்பாக கடை விற்பனையாளர் நிரந்தரமாக நீக்கப்படுவார். அதேபோல் விற்பனை அதிகமாக இருக்கும் மாலை 5 முதல் இரவு 10 மணி வரை, அக்கடையின் மேற்பார்வையாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று பலமுறை நிர்வாகம் எச்சரித்தும் பல ஊழியர்கள் திருந்தவில்லை. பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பது தொடர்கிறது. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் 10 ரூபாய் அதிகம் வாங்குவது தொடர்கிறது என்கிறார்கள் குடிமகன்கள்.

ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் பணிபுரியும் ஊழியர்கள், அரசு நிர்ணயம் செய்த விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய்க்கு மேல் வசூலிப்பதன் பின்னணியில் மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் வரை, 'கமிஷன்' செல்வதாக எதிரக்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தீவிரமாக முன்வைத்தன. அப்போது பதில் அளித்த செந்தில் பாலாஜி, எந்த கடை என்று குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது என்றார். மேலும் டாஸ்மாக்கில் கூடுதல் விலை வைத்து விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதன் பின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக முத்துச்சாமி பொறுப்பேற்ற பின்னரும் டாஸ்மாக்கில் 10 ரூபாய் அதிக வாங்குவது தொடர்கதையாக உள்ளது. இதனிடையே டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க மதுக்களின் விலை பட்டியலை தெரியும் வகையில் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படியே பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டாஸ்மாக் முறைகேட்டை தடுக்க, கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்களுக்கு அபராதம், இடமாற்றம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதனிடையே டாஸ்மாக் ஊழியர்களுக்கு சில முக்கியமான உத்தரவுகளை டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள், மதுபானம்,பீர் வகைகளை அரசு நிர்ணயித்தவிலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவார். மேலும், கூடுதல் விலை விற்பனை செய்வதைதடுக்கத் தவறிய, கடை மேற்பார்வையாளர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, கடை விற்பனை மேற்பார்வையாளர், மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணி வரை பணியில்இருக்க வேண்டும். குறிப்பாக, அதிக விற்பனை நேரமான மாலை 5முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடை மேற்பார்வையாளர்களும் கட்டாயம் கடையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், முதல்முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இரண்டாவது முறையும் கடையில் இல்லையென்றால், மேற்பார்வையாளர்கள் குறைவான விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள்" இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications