மாஸ்! ரூ. 9000 கோடியை தமிழ்நாட்டில் இறக்கும் டாடா மோட்டார்ஸ்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் டீல்!
சென்னை: தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் குழுமம் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

வாகன உற்பத்தி திட்டத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ராணிப்பேட்டையில் தொழில்ற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து, கடந்த மாதம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று முகாம் அலுவலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
வாகன உற்பத்தித் திட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில், 9000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாகனத் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே. விஷ்ணு, இ.ஆ.ப., மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பி. பி. பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications