இனிக்கும் தேநீர்.. கசக்கும் விலை! சிங்கிள் டீ விலை அதிரடியாக உயர்வு... விலையை கேட்டா ஷாக் ஆவீங்க!
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வந்துள்ள நிலையில், சென்னையில் டீ, காபி விலை உயர்ந்துள்ளது.
உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2009 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கச்சா எண்ணெய் விலை இந்தளவு உயர்வது இதுவே முதல்முறையாகும்.
அதேபோல கடந்த ஆண்டு தீபாவளிக்குப் பின்னர், விலை உயராமல் இருந்த பெட்ரோல்-டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கேஸ் சிலிண்டர்
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அதேபோல வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019 தொடக்கத்தில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் பல முறை வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

விலை உயர்வு
இப்போது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ஒன்று 2,406 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் ஹோட்டல் உரிமையாளர்களை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் காரணமாகச் சென்னையில் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகச் சென்னையில் ஒரு கிளாஸ் டீ ரூ.10-க்கும், காபி ஒரு கிளாஸ் ரூ.12-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வு
கேஸ் சிலிண்டர் காரணமாக இப்போது ஒரு கிளாஸ் டீ ரூ.10இல் இருந்து ரூ.12-15க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஒரு கிளாஸ் காபியின் விலை ரூ.12இல் இருந்து ரூ.15-17ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தேநீர்க் கடை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு சென்னை முழுவதும் உள்ள 3500 தேநீர் கடைகளிலும் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் இளைஞர்களின் உணவாக டீ, காபியே இருந்து வந்துள்ள நிலையில், இந்த விலையேற்றம் தேநீர் பிரியர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் உள்ளது.

ஹோட்டல்கள்
அதேபோல ஹோட்டல்களில் இதர உணவுகளின் விலையும் உயர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக உணவின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்னும் சில நாட்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications