டீச்சர் டு அமைச்சர்.. அதிமுக டு திமுக.. பெரும் பதவிகளை வகித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியல் கிராப்!
சென்னை : ஆசிரியராகப் பணியாற்றிய வேலையை விட்டு, அரசியலுக்கு வந்து மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் என உயர் பதவிகளை வகித்த திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது விலகல் கடிதத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிவிட்டதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் இணைந்து 1977ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக வென்று எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இடம்பெற்றவர் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
பின்னர், 1980ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் 1989 தேர்தலில் வென்று 1991 வரை சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2004ல் எம்.பியாகி மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

அரசியலை விட்டு ஒதுங்கும் சுப்புலட்சுமி
திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அரசியலிருந்து ஒய்வு பெறுவதால் கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார். தனது விலகல் கடிதத்தை திமுக தலைவர் முக ஸ்டானிக்கு அனுப்பி விட்டதாகவும் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சற்குணபாண்டியனுக்குப் பிறகு நீண்டகாலம் திமுக பொதுச் செயலாளர் பதவியை வகித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

எம்ஜிஆர் அமைச்சரவையில்
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், அரசியல் ஆர்வத்தால் அதிமுகவில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். 1977ல் அ.தி.மு.க-வில் சேர்ந்து அதே ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் 1978 முதல் 1980 வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார்.

கருணாநிதி அமைச்சரவையில்
பின்னர் 1980ல் தி.மு.க-வில் சேர்ந்து 1984ஆம் ஆண்டு திமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1989-ஆம் ஆண்டு மீண்டும் ஈரோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அப்போதே மாநில சமூகத்துறை அமைச்சர் பொறுப்பும் வகித்தார். பின்னர் 1991 தேர்தலில் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மத்திய அமைச்சர்
1993 மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1996ல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001ல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2004 மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு எம்.பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.

2021ல் தோல்வி
பின்னர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 2021 சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில், பா.ஜ.க வேட்பாளரான சரஸ்வதியிடம் வெறும் 206 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால், திமுக மேலிடத்திமும், ஈரோடு மாவட்ட அரசியலிலும் அவரது கை சரிவைச் சந்தித்தது. இந்நிலையில் தான் தற்போது அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

மன நிறைவோடு
தனது விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசு பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அன்று பதவியில் இருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாக, எனது விலகல் கடிதத்தை, தலைவருக்கு அனுப்பி விட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications