செஞ்சு காட்டிட்டாங்களே.. ராஜதந்திரமாக செயல்பட்ட ஓபிஎஸ் - இபிஎஸ்.. அதிரடியான 5 மூவ்!
மிகவும் ராஜதந்திரமாக செயல்பட்டு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்.
சென்னை: மிகவும் ராஜதந்திரமாக செயல்பட்டு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட இறுதி நிலையை அடைந்துவிட்டது. இந்த கூட்டணியில் இன்னும் தேமுதிக சேர்வது மட்டுமே பாக்கி என்ற நிலை இருக்கிறது. மிக மிக சிறப்பாக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.
இன்னும் இரண்டு நாட்களில் இந்த கூட்டணியில் தேமுதிக சேருமா, சேராதா என்பது குறித்த பதில் தெரிந்துவிடும். தேமுதிகவும் இதில் சேரும் பட்சத்தில் அது, அதிமுக கூட்டணிக்கு பெரிய பலமாக இருக்கும்.
என்ன நினைத்தார்கள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின் அதிமுக எதிர்கொள்ளும் முதல் லோக்சபா தேர்தல் இது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமைக்கும் என்ற போதே நிறைய சந்தேகங்கள், கேள்விகள் எழுந்தது. அதிமுக எப்படி கூட்டணியை அமைக்கும், ஜெயலலிதா இல்லாமல் எப்படி பேச்சுவார்த்தை நடக்கும் என்றெல்லாம் நிறைய கேள்விகள் எழுந்தது. அதிமுகவில் சரியான தலைமை கிடையாது, இதெல்லாம் ஆகக்கூடிய காரியம் கிடையாது என்றுதான் கூறினார்கள்.
சாதனை
ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய மூன்றே வாரங்களில் கூட்டணியை அதிமுக இறுதி செய்து இருக்கிறது. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ராஜதந்திரமாக செயல்பட்டு இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.
என்ன காரணம்
இப்படி ராஜதந்திரம் என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதிமுக இந்த கூட்டணியை சில நிபந்தனைகளுடன்தான் உருவாக்கி இருக்கிறது.
1. பாமகவை சரியாக உள்ளே இழுத்தது. அதிக இடமும் கொடுக்காமல், குறைந்த இடமும் கொடுக்காமல், 7 இடங்கள் கொடுத்தது.
2. பாஜக பெரிய கட்சி என்றாலும், தமிழகத்தில் பிரபலம் இல்லை என்பதால் வெறும் 5 இடங்களை மட்டுமே அளித்தது.
3. பாஜகவின் முக்கிய தலைகள் பேசியும் கூட, வெறும் 5 இடங்களை மட்டுமே, அதிமுக கொடுத்தது.
4. அதிமுக கூட்டணியில் இருக்கும் ஐஜேகே போன்ற சிறிய கட்சிகள் அனைத்தையும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைத்தது.
5. திமுகவிற்கு முன்பாகவே மிக வேகமாக கூட்டணி அறிவிப்பை வெளியிட்டது, என்று நிறைய காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
மாறி இருக்கிறார்கள்
முதலில் அதிமுகவை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வழிநடத்த தொடங்கிய போது கொஞ்சம் தடுமாறியபடிதான் இருந்தார்கள். ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் தந்திரங்களை படித்து, அதை பயன்படுத்தவும் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் என்ன மாதிரியான பதில் அளிக்க போகிறார் என்று விரைவில் தெரிய வரும்.