உழைப்பை உறிஞ்சிவிட்டு.. சக்கையாக துப்பும் டெக் நிறுவனங்கள்! ஏப்ரலில் மட்டும் 20,000 பேர் பணி நீக்கம்
சென்னை: உலகம் முழுவதும் பிரபல டெக் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20 ஆயிரம் பேரை வேலையை விட்டு துரத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றுதான் உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் என்பது சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல டெக் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு சில சிறப்பு சலுகைகளை கூட கொடுத்திருந்தன. இப்படி இருக்கையில் தற்போது அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த மாதம் மட்டும் 50 பெரிய டெக் நிறுவனங்களில் இருந்து சுமார் 21,473 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். layoffs.fyi எனும் இணையதளத்தில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரை மொத்தமாக 2714 டெக் நிறுவனங்களிலிருந்து 78,572 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாத வாரியாக பார்த்தால், ஜனவரியில் 122 நிறுவனங்களிலிருந்து 34,107 பேரும், பிப்ரவரியில் 78 நிறுவனங்களிலிருந்து 15,589 பேரும், மார்ச் மாதம் 37 நிறுவனங்களிலிருந்து 7,403 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நிறுவன ரீதியாக பார்த்தால், ஆப்பிள் நிறுவனம் 614 பேரை பணி நீக்கம் செய்திருக்கிறது. கொரோனா தொற்று காலத்துக்கு பின்னர் ஆப்பிள் எடுத்துள்ள மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கை இதுதான். இந்த ஊழியர்களில் பெரும்பாலோர் ஆப்பிளின் சிறப்புத் திட்டக் குழுவில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆப்பிள் நிறுவனம் செல்ஃப்-டிரைவ் எனப்படும் தானியங்கி காரை உருவாக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த திட்டம் பாதியில் கைவிடப்பட்டு விட்டது. எனவே அடுத்தடுத்த நாட்களில் இன்னும் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.
கூகுள் நிறுவனத்தை பொறுத்த அளவில், Python, Flutter மற்றும் Dart இல் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோரை வீட்டிற்கு துரத்தியுள்ளது இந்நிறுவனம். நிறுவன மறு சீரமைப்பு என்கிற பெயரில் இந்த பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்டாலும், புதிய வேலை வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கப்படும் என்று கூகுள் கூறியிருக்கிறது.
அமேசான் நிறுவனத்தில் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் நூற்றுக்கணக்கில் ஊழியர்கள் கொத்துக்கொத்தாக வேலையை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரிவு விற்பனை, சந்தைப்படுத்தல் ஆகியவற்றை பாதிக்கிறது என்று அமேசான் சாக்கு கூறியுள்ளது.
இப்படியாக இன்டெல், பைஜூஸ், டெஸ்லா, ஓலா கேப்ஸ், ஹெல்த்ஃபைம், வேர்ல்பூல், டேக்-டூ இன்டராக்டிவ், டெலினார் என பிரமாண்ட நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தியுள்ளன.
வேலையை விட்டு நிறுத்தப்பட்ட ஊழியர்களுக்கு கணிசமான தொகையை இந்நிறுவனங்கள் வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இப்படி கொத்து கொத்தாக வேலையை விட்டு துரத்தப்படுவது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என பணியாளர்கள் குமுறுகிறார்கள்.
லாபம் இல்லை, மறுசீரமைப்பு, திறன் இல்லை, உற்பத்தி குறைவு என பணி நீக்கத்திற்கு நிறுவனங்கள் புதிது புதிதாக பெயர்களை வைக்கின்றன. ஆனால் உண்மையில் எந்த நிறுவனங்களும் லாபம் இல்லாமல் நடத்தப்படுவதில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். லாபத்தில் சிறிது குறைந்தால் கூட சகித்துக்கொள்ள முடியாத நிறுவனங்கள், தொழிலாளர்களை கசக்கி பிழிந்தெடுக்கும் போது ஏன் கவலைப்படுவதில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டெக் நிறுவனங்களின் இந்த பிரமாண்ட பணி நீக்க நடவடிக்கை, எப்படியும் இந்த நிறுவனங்களுடன் நிற்கப்போவதில்லை. இதைச் சார்ந்து இருக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு பரவ இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications