ஷார்ட்ஸ் அணிந்த இன்ஜினியருக்கு தடை.. ஸ்டாலின் தொகுதியில் நடந்த சம்பவம்.. Co Working Space தகராறு
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் மற்றும் ஊழியர்கள் வந்து பணியாற்றும் மையத்துக்கு ஷார்ட்ஸ் அணிந்து சென்ற ஐடி ஊழியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஷார்ட்ஸ் அணிந்து வரக்கூடாது என்ற ரூல்ஸை காட்டும்படி அவர் கூறி வாக்குவாதம் செய்ததால் அங்கிருந்து வெளியே விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது செல்போனை பிடுங்கி கேலரியில் உள்ள போட்டோக்கள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதி சென்னை கொளத்தூராகும். இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் ‛Co-Working Space (பகிர் பணியிடம்) மற்றும் கல்வி மையம்' கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இங்கு அரசு பணிக்கு தேர்வாகும் மாணவ-மாணவிகளுக்கான புத்தகம், வைபை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. பணியாற்றும் நபர்களும் இங்கு வந்து பணியாற்றலாம். இந்த கட்டடத்தால் தினமும் ஏராளமானவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றும் திலீப் சீனிவாசன் என்பவர் தனது நண்நபருடன் சென்றார். அங்கிருந்து பணியாற்றும் முனைப்பில் அவர் ‛என்ட்ரி' கொடுத்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திலீப் சீனிவாசன் ஷார்ட்ஸ் அணிந்திருந்தார்.
இதனால் அங்குள்ள மேனேஜர் ஹெலன் அனிதா அவரை அனுமதிக்கவில்லை. ஷார்ட்ஸ் அணிந்து வந்தால் அனுமதியில்லை என்று கூறினார். அதனை திலீப் சீனிவாசன் ஏற்கவில்லை. ஷார்ட்ஸ் அணிந்திருந்து வரக்கூடாது என்ற விதி எங்கு உள்ளது? சென்னை மாநகராட்சி சார்பில் அப்படியான உத்தரவு எங்கு உள்ளது? மாநகராட்சியின் இணையதளத்தில் கூட அப்படியான கட்டுப்பாடு இல்லையே என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவம் நடந்த இடத்துக்கு சென்னை மாநகராட்சியின் உதவிசெயற்பொறியாளர் பாபு வந்தார்.அவருடன் 69வது வார்டு உதவி பொறியாளர் விஜயகுமார் வந்தார். அவர்களுக்கும், திலீப் சீனிவாசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரூல்ஸ் புக்கை காட்டுங்கள் என்று அவர் கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்த போர்டை தூக்கி வந்து காண்பித்தனர்.
அதில், நன் the guest will have to come in a pleasant manner என்று எழுதி இருந்தது. இதையடுத்து அவர் வெளியே அனுப்பப்பட்டார். இதுபற்றி திலீப் சீனிவாசன் கூறுகையில், ‛‛ 2 அதிகாரிகள் 4 பேருடன் சேர்ந்து என்னை கட்டாயமாக நுழைவு வாயிலில் இருந்து வெளியே தள்ளினர். என்னுடைய செல்போனை பறித்து கொண்டனர். கேலரியில் இருந்த போட்டோக்களை டெலிட் செய்தனர்'' என்றார்.
இதுபற்றி மேனேஜர் ஹெலன் அனிதா கூறுகையில், ‛‛இங்கு எந்த விதியும் இல்லை. ஆனால் பெண்களும் இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஓரளவு நன்றாக வர வேண்டும்'' என்றார். அதேபோல் உதவி இன்ஜினியர் விஜயகுமார் கூறுகையில், ‛‛மையத்துக்கு வந்தவர்கள் அமைதியாக திரும்பி சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செம்பியம் போலீஸ் நிலையத்தில் வாய்மொழியாக தவகல் அளிக்கப்பட்டது. போலீசார் கான்ஸ்டபிளை அனுப்பி வைத்தனர்'' என்றார்.
இதுபற்றி சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛இங்கு வருபவர்கள் பார்க்கும் படியான நல்ல உடைகளை அணிய வேண்டும். இதற்கு என்று தனியாக ரூல்ஸ் இல்லை. இதுதொடர்பாக பிறகு இடங்களை ஆராய்ந்து தேவைப்பட்டால் டிரஸ்கோட் தொடர்பான விதிகளை வகுப்போம்'' என்றார்.












Click it and Unblock the Notifications