ஓபன் பண்ணி ஒரு வாரம் தானே ஆச்சு.. கலைஞர் பூங்காவில் அந்தரத்தில் தவித்த பெண்கள்! திக்திக் நிமிடங்கள்
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்காவில் ஜிப் லைனில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இரண்டு பெண்கள் அந்தரத்தில் தவித்து வந்த நிலையில் அவர்கள் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் திறந்து வைத்தார். தொடர்ந்து பூங்காவில் உள்ள வசதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இந்த பூங்காவில், உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளம் உடைய 'ஜிப்லைன்' (கயிற்றில் தொங்கி செல்லும் சாகசம்), பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவு பாதை, 120 அடி நீளம் உடைய பனிமூட்ட பாதை, 2,600 சதுரஅடி பரப்பிலான ஆர்க்கிட் குடில், 10,000 சதுரஅடி பரப்பில் அரியவகை பூச்செடிகளால் அமைக்கப்பட்டுள்ள 16 மீட்டர் உயர கண்ணாடி மாளிகை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், வெளிநாட்டு பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்கள் இந்தப் பூங்காவில் உள்ளன. இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள். நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது.
மேலும் பூங்காவினை பார்வையிட தனிதனியாக கட்டணமும் அரசு சார்பிலேயே நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி காரணமாக தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று கலைஞர் பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான மக்கள் பூங்காவில் பல்வேறு பகுதிகளை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
குறிப்பாக பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஜிப் லைனில் பலரும் பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் பூங்காவில் உள்ள ஜிப் லைனில் திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஜிப் லைனில் பயணம் செய்த இரண்டு பெண்கள் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அந்தரத்தில் தவித்தனர். தொடர்ந்து கோளாறு சரி செய்யும் பணி நடைபெற்ற போதும் ஜிப் லைன் செயல்படவில்லை. இதை அடுத்து அந்த பெண்கள் அலறிய நிலையில் கயிறு கட்டப்பட்டு அவர்கள் இழுத்து மீட்கப்பட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கலைஞர் பூங்காவை திறந்து ஒரு வாரமே ஆன நிலையில் ஜிப் லைனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரு பெண்கள் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தின் வருகின்றனர். அதே நேரத்தில் வரும் காலங்களில் இதுபோன்று நிகழ்வுகள் நடக்காமல் இருகக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications