4 மாநிலத்தில் ஆட்சி கவிழும்.. கையெடுத்து கும்பிட்ட கேசிஆர்.. ஸ்டாலினுக்கு போன "வீடியோ".. விளாசல்!
சென்னை: 4 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை சந்திரசேகர ராவ் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளார்.
தெலுங்கானாவில் பாஜக - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளுக்கு இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. அங்கு நேற்று முனுகோட் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தல் காரணமாக அங்கு அரசியல் களம் சூடாக இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிந்ததும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முக்கியமான வீடியோ ஒன்றை நேற்று செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து உள்ளார்.

தெலுங்கானா
தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக கூறி அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏக்களை பாஜகவிற்கு தாவ சொல்லி பேரம் நடந்ததாக கூறி, இந்த வீடியோவையோ சந்திரசேகர ராவ் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் ராமச்சந்திர பாரதி, சிம்ஹாஜி மற்றும் நந்த குமார் என்ற மூன்று நிர்வாகிகள் உள்ளனர். இவர்கள் 4 டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இழுக்க பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

கேசிஆர்
இதற்கான வீடியோவை சந்திரசேகர ராவ் பகிர்ந்து, கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க இவர்கள் திட்டம் போடுகிறார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளது. கையும், களவுமாக அவர்கள் சிக்கிவிட்டனர் என்று கேசிஆர் குறிப்பிட்டு உள்ளார்.

பாஜக
அதோடு கையெடுத்து கும்பிட்டு பேசிய அவர்.. இந்த வீடியோக்களை பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு அனுப்புவேன். உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு அனுப்புவேன். உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்புவேன். தேர்தல் ஆணையத்திற்கு இந்த வீடியோவை அனுப்புவேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கவிழ்க்க இவர்கள் மோசமாக திட்டம் போடுகிறார்கள்.

மோடி
ஜனநாயகத்தை நசுக்க இவர்கள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். உங்களிடம் கையெடுத்து கும்படுகிறேன், இந்த வீடியோக்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. இந்த வீடியோவில் இருக்கும் நபர்களில் ஒருவர் துஷார். இவர் அமித் ஷாவின் ஆள், பாஜக சார்பாக வயநாட்டில் இவர் போட்டியிட்டார். இவர்தான் ஆட்சியை கவிழ்ப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்.

ஆபரேஷன் கமலா
மேற்கொண்டு பேசிய கேசிஆர்.. பிரதமர் மோடியிடம் சொல்கிறேன்.. நானும் உங்களை போல்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர். உங்களை போல அரசியலமைப்பு சட்ட ரீதியாக நானும் ஆட்சி செய்துதான் வருகிறேன். இது போன்ற மோசமான சதித்திட்டங்களை நிறுத்துங்கள். இது நல்லதற்கல்ல. உங்களுக்குத்தான் இது அசிங்கத்தை ஏற்படுத்தும் என்று கே சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சமீபத்தில் ரங்கா ரெட்டி பகுதியில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பணத்தை வைத்து பேரம் பேசிய சம்பவத்தில் பாஜகவிற்கு தொடர்புடைய 4 பேர் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ ஆதாரம்
இது தொடர்பான வீடியோ இன்று முதல்வர் ஸ்டாலினுக்கும் கே சந்திரசேகர ராவ் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எம்எல்ஏக்களிடம் பேரம் பெற பேச முயன்றது தொடர்பான வீடியோவை அவர் இன்று காலை ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவை எதிர்ப்பதில் கேசிஆர், ஸ்டாலின் ஆகியோர் ஒற்றுமையாக இருக்கின்றனர். பாஜகவிற்கு எதிராக இவர்கள் ஒருமித்த குரலில் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications