தம்பி உதயநிதிக்கு சொல்ல விரும்புவது இதுதான்.. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொடுத்த அட்வைஸ்
சென்னை: இல்லாத ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு அதற்காக தான் போராடுவதாக காட்டிக்கொள்வது சரியல்ல என்று சனாதன விவகாரம் தொடர்பாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கண்டனம் அதிகரித்திருக்கிறது.
இதுபோன்ற கண்டனங்களுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்" என்று கறாராக கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், "கலைஞர் போன்றவர்களால் மட்டும்தான் இந்த உடன்கட்டை ஏறுவது நிறுத்தப்பட்டது என்று உதயநிதி ஸ்டாலின் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார். சென்னையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,
"சாதிய பாகுபாடு என்றால் சனாதனம் என்கிற பெயரை வைத்துக்கொண்டு, அதை எதிர்த்து போராடுவதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி.. தம்பி உதயநிதிக்கு நான் சொல்ற விஷயம் என்னவென்றால், இதுபோன்ற பெரியவர்கள் எல்லாம் அதற்காக போராடினார்கள். ஆனால் சிலபேருக்கு மட்டுமே அதற்கான கிரிடிட்டை கொடுத்துவிட்டு, இன்றைக்கு அதுபோன்ற கொடுமைகள் இருக்கிறது என்று அவர் பேசிக்கொண்டு இருக்கிறார்.
இதெல்லாம் பல தலைவர்கள்.. உடன்கட்டை ஏறுதல், குழந்தை மறுமணம், பெண்கள் கல்வி இதற்கெல்லாம் பல தலைவர்கள் போராடியதால் இன்று பெண்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் இல்லாத ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு அதற்காக தான் போராடுவதை போல பேசிக்கொண்டிருப்பது சரியல்ல" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications