'வாரிசு அரசியல்' அண்ணன் கட்சியின் தலைவர்.. துணைப் பொதுச்செயலாளர் தங்கை.. தமிழிசை சொன்ன வார்த்தை!
சென்னை: வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக மக்கள் நினைக்க வாய்ப்பு இருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வுசெய்யப்பட்டார். இதனையடுத்து காலியாக இருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியில் கனிமொழி நியமிக்கப்பட்டார்.
தமிழக அரசியலில் பெண் ஆளுமைகள் குறைவாக இருக்கும் சூழலில், ஆளும் கட்சியின் முக்கியமான பொறுப்புக்கு கனிமொழி உயர்ந்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குமரி அனந்தன் அரசு மருத்துவமனையில் அனுமதி! திடீர் மூச்சுத்திணறல்! பதறிப்போன தமிழிசை சவுந்தரராஜன்!
தமிழிசை பேட்டி
இந்த நிலையில் சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு பெண் உயர் பதவிக்கு வருவது சிரமமான காரியம் தான். அதற்கு எனது பாராட்டுக்கள். ஆனால் ஒன்றே ஒன்று, வாரிசு அரசியல் என்பது தான் அடையாளமாகிவிடுமோ என்று ஒரு சந்தேகம்.
வாரிசு அரசியல்
ஏனென்றால் திமுக தலைவர் அண்ணன். துணை பொதுச்செயலாளராக தங்கை. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் அப்படி வரும்போது, வாரிசு அரசியல் என்று பலரும் நினைக்கக் கூடும். இது எனது கருத்தல்ல. யாராக இருந்தாலும் ஒரு பெண் பதவிக்கு வருவதற்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.
திருக்குறள் சர்ச்சை
தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் பற்றி பேசிய கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, திருவள்ளுவரை ஆன்மிகவாதியாக சிலர் நம்புகிறார்கள். அவர் அவ்வாறு உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறார். மறைக்கப்பட்ட வரலாறை மீட்டெடுக்க ஆளுநர் ரவி அப்படி பேசி இருக்கலாம். ராஜராஜசோழன் வரலாறும் மறைக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு நோக்கத்துடன் திருக்குறளை படிக்கிறார். அது பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை
அண்மையில் திருக்குறள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், திருக்குறள் ஆன்மிகத்தை கற்பிக்கிறது. ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. ஆனால் இந்த புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த புத்தகத்தை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் அது தெரியும். ஆனால் ஒரு சிலர் திருக்குறளை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர் என்று பேசி இருந்தார்.