கள்ளக்குறிச்சியில் 55 உயிர்களை காவு வாங்கிய தெலுங்கானாவில் இருந்து ரயிலில் கடத்திவரப்பட்ட மெத்தனால்!
சென்னை: தமிழ்நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்த 55 உயிர்களைக் குடித்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான மெத்தனால், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி கொண்டுவரப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் துக்க வீட்டில் 200-க்கும் அதிகமானோர் கள்ளச்சாரயத்தை குடித்திருக்கின்றனர். இந்த கள்ளச்சாராயத்தை குடித்த அனைவருமே கடுமையாக உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் தற்போது வரை மொத்தம் 55 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
கள்ளக்குறிச்சியின் கருணாபுரம் பகுதியில்தான் கொத்து கொத்தாக உயிர்கள் செத்து மடிந்துள்ளன. கருணாபுரம் பகுதியில் ஒரே தெருவில் 12-க்கும் அதிகமானோர் கள்ளச்சாராயம் குடித்து மாண்டு போயிருக்கின்றனர். கருணாபுரத்தில் ஒவ்வொரு தெருவிலும் மரண ஓலம் இன்னமும் அடங்கவில்லை. தமிழ்நாடு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருணாபுரம் பகுதிக்கு சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ரூ10 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிறது அதிமுக. தமிழக சட்டசபையிலும் கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து நேற்று அதிமுகவினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்ததுதான் இத்தனை உயிர்கள் பலியாகக் காரணம் என்கின்றனர் போலீசார். மேலும் கள்ளச்சாராய வழக்குகளில் சிக்கியவர்கள் மற்றும் தொடர்புடையவர்களை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணகளில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலம் மெத்தனால் கடத்தி கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது. முதலில் சென்னைக்கு மெத்தனால் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்படுமாம். பின்னர்தான் வட மாவட்டங்களுக்கு மெத்தனால் கள்ளத்தனமாக விநியோகிக்கப்படுமாம்.
இத்தகைய மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்ததால் 55 உயிர்கள் பறிபோனது என்றும் மெத்தனால் கலக்காமல் இருந்தால் இவ்வளவு மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்பதும் போலீஸ் தரப்பு தகவல்.












Click it and Unblock the Notifications