திடீரென பற்றி எரிந்த மாநகர பஸ்.. பீதியில் உறைந்த பயணிகள்.. சென்னை அடையாறில் பரபரப்பு
சென்னை: சென்னை அடையாறு அருகே மாநகர பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. எப்போதும் பிசியாக இருக்கும் எல்.பி சாலையில் மாநகர பஸ் தீ பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
சென்னை அடையாறு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உரிய நேரத்தில் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு 102 என்ற வழிட எண் கொண்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பிராட்வேயில் இருந்து மெரினா கடற்கரை, காமராஜர் சாலை வழியாக அடையாறு, திருவான்மியூர், பெருங்குடி, சிறுசேரி வழியாக இந்த பேருந்து கேளம்பாக்கம் வரை செல்லும்.
ஐடி நிறுவனங்கள் குவிந்துள்ள பகுதிகள் வழியாக செல்லும் இந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இந்த நிலையில், இன்று வழக்கம் போல இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த சென்னை மாநகர பேருந்து ஒன்று அடையாறு எல்.பி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரெனெ தீ பிடித்துள்ளது. அடையாறு டெப்போ அருகே வந்த போது கியர் பாக்ஸ் பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டக்டரும் டிரைவரும் கவனித்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக பயணிகளை இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். பயணிகள் இறங்கிய சற்று நேரத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் போல காட்சி அளித்தது. அருகில் கடையில் உள்ளவர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் உரிய நேரத்தில் இறக்கி விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ பிடித்த பேருந்து சி.என்.ஜி. கேஸ் மூலமாக இயக்கப்படும் பேருந்து என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பரபரப்பு மிக்க சாலையில் பேருந்து தீ பிடித்து எரிந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications