எழும்பூர் - கடற்கரை 4-வது ரயில் பாதை 100 சதவீதம் நிறைவு.. விரைவில் சென்னைக்கு நல்ல செய்தி
சென்னை: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் நீண்ட காலமாக இயக்கப்பட்டு வந்தன. நான்காவது பாதை இல்லாத காரணத்தால் தாம்பரம் முனையத்திற்கு வடமாநில ரயில்களை அதிகமாக இயக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது 100 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் மின்சார ரயில்கள் தான் பலருக்கும் பிடித்தபோக்குவரத்தாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில்களில் பயணித்து சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக போக முடியும். சென்னை மின்சார ரயில் வழித்தடத்தில் பிரதான வழித்தடம் என்றால் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடம் தான். இந்த வழித்தடத்தில் தாம்பரம் முதல் எழும்பூர் வரை நான்கு பாதைகள் உள்ளன.

ஆனால் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே மூன்று பாதைகள் தான் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதில் இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வந்தன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், தாம்பரம் முனைத்திற்கு வட மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, எழும்பூர் - கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதன்பேரில், 4-வது பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, 4-வது பாதை அமைக்கும் பணி ரூ.274.20 கோடி மதிப்பில், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இப்பணிக்காக கடற்கரை - சிந்தாரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிந்தது. அதன்பின்னர் ரயில் பாதை பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கோட்டை ரயில் நிலையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பணிகள் தாமதம் ஆனது.
இந்நிலையில் ஒரு வழியாக நிலத்தைப் பெற்று, பணிகள் மீண்டும் நடைபெற்றது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபரில் கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. அதேநேரம், தண்டவாளம், சிக்னல் அமைப்பு மற்றும் மின் சாதனம் நிறுவுதல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. தற்போது சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே நான்காவது பாதை அமைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில், இப்பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் வந்து ஆய்வு நடத்த உள்ளார். மேலும் அதிவேக சோதனை ஓட்டம் மேற்கொள்ள உள்ளார்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கும் பணி மின்மயமாக்கப்பட்ட அகலப்பாதை அமைக்கப்பட்டு வந்தது. தற்போத 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ரயில் பாதையை ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வர உள்ளார். அவர் இப்பாதையை ஆய்வு செய்து, ஒப்புதல் கொடுப்பார். அதன்பிறகு, ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும். இதன் மூலம், அதிக ரயில்களை இயக்க முடியும் என்றார்.
இதனிடையே தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் 6-ம் தேதி (இன்று) ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, அதிவேக சோதனை ஓட்டம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதையில் இன்று ஆய்வு மற்றும் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதால், பொதுமக்கள் யாரும் ரயில் பாதைகளை நெருங்கவோ, அத்துமீறி நுழையவோ கூடாது என்று ரயில்வே எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications