ஜெ. இறந்த போதே கூட்டினோம்! பொதுக்குழுவிற்கு தலைமை கழகம் அழைப்பு விடுக்க முடியும்! - எடப்பாடி வாதம்
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு தலைமை கழகம் அழைப்பு விடுக்க முடியும், முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இறந்த போதே பொதுக்குழுவிற்கு தலைமை கழகம் அழைப்பு விடுத்தது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரிய ஓ பன்னீர்செல்வம் மனு மீதான உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரணை இன்று மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் நேற்று எடப்பாடி தரப்பிற்கு உயர் நீதிமன்றம் முக்கியமான கேள்விகள் சிலவற்றை வைத்தது.

என்னென்ன கேள்விகள்
அதில், ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழகம் எப்படி கடிதம் அனுப்ப முடியும்? பொதுக்குழுவை கூட்ட எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்? என்று உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் காலாவதியாகவில்லை.

பொதுக்குழு
ஆனால் பொதுக்குழுவில் இந்த பதவிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் உட்கட்சி தேர்தலும் செல்லாது. எனவே பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பொதுக்குழுவை கூட்ட முடியும். இரு பதவிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்படாததால் தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதிமுக பொதுக்குழுவிற்கு தலைமை கழகம் அழைப்பு விடுக்க முடியும், முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இறந்த போதே பொதுக்குழுவிற்கு தலைமை கழகம் அழைப்பு விடுத்தது.

நோட்டீஸ்
வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 20 சதவீத பொதுக் குழு உறுப்பினர்கள், பொதுக்குழுவை கூட்ட கோரினால் 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும். 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பொதுக்குழுவை கூட்ட 15 நாள் அவகாசம் தேவையில்லை. பொதுக்குழுவை கூட்ட எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும் என கட்சி விதி தெரிவிக்கவில்லை. 30 ஆண்டுகள் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா 5.12.16ல் இறந்தபிறகு சசிகலா இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார்.

தலைமை கழகம்
29.12.2016 இடைக்கால பொது செயலாளராக சசிகலாவை நியமிக்க தலைமை கழக நிர்வாகிகள் பரிந்துரை செய்தனர். அவர் சிறை சென்றார். 12.07.2016 பொதுக்குழு கூட்டப்பட்டது - அதற்கும் தலைமை கழக நிர்வாகிகள் தான் அழைப்பு விடுத்தனர். 2016 டிசம்பர் 29ம் தேதி தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவை கட்சி நிர்வாகிகள் நியமித்தனர். அதன் பின் சொத்து வழக்கில் சிறை சென்றார்

நோட்டீஸ்
2017 செப்டம்பர் 12ல் நடந்த பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் கட்சி நிர்வாகிகளால் அனுப்பப்பட்டது. அதில் தலைமைக்கழக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். அந்த அடிப்படையில் தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். எனவே அதிமுக பொதுக்குழுவிற்கு தலைமை கழகம் அழைப்பு விடுக்க முடியும் என்பது உறுதி ஆகியுள்ளது.

எடப்பாடி வாதம்
இரு பதவிகளுக்கும் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதால் தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். எனவே பொதுக்குழு நடத்த அனுமதி தர வேண்டும். ஜூன் 23ல் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் தான் ஜூலை 11 கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனால் பொதுக்குழு குறித்து கடைசி நேரத்தில் நோட்டீஸ் அனுப்பியதாக கூற முடியாது என்று எடப்பாடி தரப்பு வாதத்தில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications