காமராஜர் பிறந்தநாளில் தொடங்கப்படும் "விஜய் பயிலகம்"! அதுவும் 234 தொகுதிகளிலும்.! அதிரடி அறிவிப்பு
சென்னை: கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க விஜய் பயிலகம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர் விஜய். உலகெங்கும் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவரது படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பை இதற்கு ஒரு சாட்சியாகும்.
கடந்த சில ஆண்டுகளாகவே விஜயின் ஒவ்வொரு செயலும் அரசியலைச் சுற்றியே இருந்து வருகிறது. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றே பலரும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

நடிகர் விஜய்: அவரது செயல்பாடுகளும் அதை நோக்கி இருப்பது போலவே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னரே தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய், அதன் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார். இது மட்டுமின்றி கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலிலும் களமிறங்கினர். விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலில் போட்டியிடுவது இது முதல்முறை இல்லை என்ற போதிலும், தனது படத்தையும் ரசிகர் மன்ற கொடியையும் பிரசாரத்தில் பயன்படுத்த முதல்முறையாக ஒப்புதல் தரப்பட்டது.
இதுவே அரசியல் என்டரிக்கான தெளிவான ஆதாரம் என்றே பலரும் கூறினர். மேலும், அந்த தேர்தலில் வென்றவர்களுடன் போட்டோவும் எடுத்தார். மேலும், அவர் தனது ரசிகர்களை அம்பேத்கர் சிலைக்கும் தீரன் சின்னமலை சிலைக்கும் மரியாதை செலுத்தவும் கேட்டுக் கொண்டார். இப்படி ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியலை மனதில் வைத்தே அவர் எடுத்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து கடந்த மாதம் மாநில அளவில் 10ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகையையும் அவர் அளித்தார். காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு வரை பல மணி நேரம் நீடித்த நிலையில், ஒவ்வொரு மாணவருக்கும் பொறுமையாக அவர் பரிசை வழங்கினார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தொகுதி வாரியாக 234 தொகுதிகளில் டாப் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கே அவர் பரிசை வழங்கினார்.
விஜய் பயிலகம்: இதற்கிடையே அடுத்த கட்டமாகக் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூலை 15ஆம் தேதி விஜய் பயிலகம்' ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் 234 தொகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு வியர் மக்கள் இயக்கத்தினருக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜயின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பெருந்தலைவர் காமராஜரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 'விஜய் பயிலகம்' ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications