தம்பிதுரை ரிப்போர்ட் எடப்பாடி பழனிசாமி கையில்.. திமுக கணக்கு தப்புமா? அதிரவிட்ட சேலம் பவர் புள்ளிகள்
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் சேலம் இல்லம் திடீர் அரசியல் நகர்வுகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளது... ஆம், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. என்னவா இருக்கும்?
பொதுவாக கருத்துக் கணிப்புகள் வெளியான பிறகு, பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அமைதி காப்பது வழக்கம். ஆனால், எடப்பாடி பழனிசாமி 2 நாட்களுக்கு முன்பே, "கருத்துக் கணிப்புகள் என்பது திமுகவின் பித்தலாட்ட நாடகம், இதைக்கண்டு அதிமுகவினர் யாரும் மனம் தளர வேண்டாம்" என்று மிகவும் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சேலம் எடப்பாடி இல்லம்
அதுமட்டுமல்ல, வரலாற்றில் பலமுறை கருத்துக் கணிப்புகளைத் தகர்த்தெறிந்துதான் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது என்ற நம்பிக்கையையும் தன்னுடைய தொண்டர்களுக்கு எடப்பாடி விதைத்தார்.
இவ்வளவு உறுதியாக அறிக்கை வெளியிட்டவர், அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியது ஏன் என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது.
தம்பிதுரை தந்த ரிப்போர்ட்
கோயம்புத்தூர் மற்றும் மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து எஸ்.பி. வேலுமணியிடம் எடப்பாடி பழனிசாமி விரிவாகக் கேட்டறிந்ததாகத் தெரிகிறது.
மேற்கு மண்டலம் என்பது அதிமுகவின் இரும்புக்கோட்டை என்று அழைக்கப்படும் பகுதி. அங்கு ஒருவேளை கருத்துக் கணிப்புகள் சொல்வது போலச் சிறு சறுக்கல் ஏற்பட்டால், அது கட்சியின் எதிர்காலத்தையே பாதிக்கும் என்பதை எடப்பாடி பழனிசாமி நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
தம்பிதுரை போன்ற மூத்த தலைவர்களுடனான சந்திப்பு, டெல்லி அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சாத்தியக்கூறுகள் குறித்த ஆலோசனையாகவும் இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
தம்பிதுரையிடம் என்ன சொன்னார்
இந்த சந்திப்பிற்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை.. எனினும், வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் குளறுபடிகள் நடக்காமல் தடுப்பது எப்படி, மற்றும் இழுபறி ஏற்படும் தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது.
எக்ஸிட்போல் குறித்து தம்பிதுரை கள நிலவர அறிக்கையை எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது. டெல்லி அரசியல் நகர்வுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று அதிமுக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட வியூகங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
ஹாட் டாபிக் இதுதான்
அதுமட்டுமல்ல, கருத்து கணிப்புகளை வெளியில் தைரியமாக எதிர்கொண்டாலும், உள்ளுக்குள் தேர்தல் கள நிலவரத்தைத் துல்லியமாக கணித்து, அடுத்தகட்டத் திட்டத்தை தீட்டுவதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கியுள்ளதையும் இது காட்டுகிறது.
கருத்துக் கணிப்புகள் பாதகமாக வரும்போது தொண்டர்கள் சோர்ந்து போய்விடக் கூடாது என்பதற்காகவே அந்த அறிக்கையை எடப்பாடி வெளியிட்டார். ஆனால், நிஜமான கள நிலவரம் என்ன? வாக்கு எண்ணிக்கையின் போது சந்திக்க வேண்டிய சவால்கள் என்ன? என்பதைத் திட்டமிடவே இந்தச் சேலம் சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தத் திடீர் ஆலோசனைகள் வெறும் தேர்தல் முடிவுகளுக்கானது மட்டுமல்ல, முடிவுகளுக்கு பிறகு கட்சியை வழிநடத்தப்போகும் ஒரு பெரும் வியூகத்தின் தொடக்கமாகவும் இருக்கலாம்.
அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களைக் கைப்பற்றும் என பழனிசாமி நம்பிக்கை தெரிவித்த மறுநாள் இந்தக் கூட்டம் நடைபெறுவதால், இது முக்கியத்துவம் பெற்று வருகிறது... எடப்பாடியின் இந்த ரகசிய ஆலோசனைகள் தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்காக எகிறி உள்ளது...!!












Click it and Unblock the Notifications