சூர்யா அப்படி என்ன தவறாக பேசிவிட்டார்...? கேள்வி எழுப்பும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ..!
சென்னை: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அப்படி என்ன தவறாக பேசிவிட்டார் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் கருத்தை ஆரோக்யமான முறையில் எதிர்கொள்வதே சிறந்த ஜனநாயகம் என ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கடந்த 12.09.2020 அன்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு பதட்டம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தமிழகமே கவலை கொண்டது. அந்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் சூர்யா அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு அமோக வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளது என்பதே யதார்த்த உண்மையாகும்.
இந்திலையில் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என முன்னாள் நீதிபதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்படி என்ன சூர்யா தவறாக பேசி விட்டார்? என்ற கேள்வி பரவலாக எதிரொலிக்கிறது.
ஜனநாயக வழியில் மக்களின் உணர்வுகளை எதிரொலித்த நடிகர் சூர்யா மீது நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதோடு, இது கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயலாகவே கருதப்படும். அவரின் கருத்தை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வதே சிறந்த ஜனநாயக முறையாக இருக்கும். எனவே அவர் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications