ஐநாவில் எத்தனை விதிகள் இருந்து என்ன பயன்? 1 விதி கூட பாலஸ்தீனியர்கள் தலைவிதியை மாற்றவில்லை! -அன்சாரி
சென்னை: ஐ.நா.வில் எத்தனையோ விதிகள் இருந்தும் ஒரு விதி கூட பாலஸ்தீனியர்களின் தலைவிதிக்கு தீர்வு காணவில்லையே என்ற ஆதங்கத்தை உருக்கமுடன் கவிதையாக எழுதியுள்ளார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக தமிமுன் அன்சாரி எழுதிய உருக்கமான கவிதை வருமாறு;

இஸ்ரேலிய கழுகுகளின்
சியோனிஸ தாக்குதல்களில்;
கான்க்ரீட் குப்பைமேடுகளாய்;
காட்சியளிக்கிறது காஸா!
இங்கு ஏவுகணைகளால்
இடிந்து விழுவதற்காகவே
கட்டப்படுகின்றன
கட்டிடங்கள்!
போரில் சாவதற்காகவே,
வாழ்கிறார்கள் மனிதர்கள்!
**********
வாழ்வில் போராட்டங்கள் இருக்கலாம்:
போராட்டங்களே வாழ்க்கையாகலாமா?
வெடிவயல்களில் வாழ்ந்தே
பழக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு,
இந்தப் போரும்
வாழ்க்கையாகிவிட்டது!
***********
இடிபாடுகளில் கதறும் மனித ஓலங்கள்
மனசாட்சியை உலுக்குகின்றன;
ஆனால்,
உலகின் பெரும்பகுதி
ஊமையாகவே இருக்கிறது!
*********
யாருக்கு யார்
ஆறுதல் கூறுவது?
என தெரியாமல்
கலங்கி நிற்கும் அபலைகளுக்கு;
கைக்குட்டைகளை கொடுக்கக் கூட
பலருக்கு மனமில்லை!
*********
தாய் இறந்தது கூட தெரியாமல்
மார்பில் பால் அருந்த துடிக்கும்
பாலகர்கள்:
அண்ணனின்
கடைசி நேர உயிர் வலிகளை
புரிய முடியாமல் துடிக்கும் தம்பிகள்:
மருத்துவமனையில் பெற்றோரை இழந்த குழந்தைகள்:
என
முடிவில்லா துயரில்
மூழ்கி தவிக்கிறது காஸா...
********
உதவிக்கு
அண்டை அயலார்
ஓடோடி வருவார்கள் என காத்திருந்தவர்களுக்கு;
கிடைத்தது
காகிதத்தில் எழுதப்பட்ட
கண்டன தீர்மானங்கள் மட்டுமே...
கச்சா எண்ணெயைப் பற்றி
கவலைப்படுபவர்கள்;
காஸாவின் கண்ணீர் ஓலங்களை
வேடிக்கைப் பார்ப்பதில் ஆச்சர்யமில்லைதான்...
********
வெடி மருந்து கிடங்குகளை
வழிநடத்தும் வல்லரசுகளுக்கு;
இப்போர் ஒரு வணிகம் !
இனி,
கள சண்டைகளும்,
ஆயுத சந்தைகளும்
பரபரப்பாகும்...
24 மணி நேரமும் அவர்களது
ஆயுத தொழிற்சாலைகள் இயங்கும்!
ஐ.நா.வில் எத்தனையோ விதிகள்
உண்டு!
ஒரு விதி கூட
பலஸ்தீனியர்களின் தலைவிதிக்கு
தீர்வு காணவில்லை..!
********
பாலை புழுதியில்
ரத்தச் சகதியில்
உயிருக்கு போராடும்
அம்மக்களுக்கு உதவாத
ஐக்கிய நாட்டு சபை இனி எதற்கு ?
*****
வெப்ப புயலில்
கருகாமல்
களமாடும்
பலஸ்தீனியர்களே...
பைத்துல் முகத்தஸின் புதல்வர்களே...
காத்திருங்கள்... காத்திருங்கள்...
அபாபீல்களும், அய்யூபிகளும் வருவார்கள்
நபிமார்கள் நடமாடிய மண்ணில் ரோஜாப் பூக்கள் மலரும்...
ரத்தத் தடாகங்களின் வழியே
சமாதானத்தின் நறுமணம் கமழும்..!
இவ்வாறு அவர் தனது ஆதங்கத்தையும், வேதனையையும் கவிதை நடையில் எழுதியுள்ளார்












Click it and Unblock the Notifications