"குட்டையை குழப்ப வேண்டாம்.. ஒழுங்கா படிங்க".. கொதித்து போன சீமான்.. தங்கம் தென்னரசு பதிலடி!
சென்னை: 'திராவிடக் களஞ்சியம்' தொடர்பாக நாம் தமிழர் சீமான் வெளியிட்ட அறிக்கைக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் பல்வேறு வரலாற்று நூல்களை தொகுத்து 'திராவிடக் களஞ்சியம்' என்ற பெயரில் வெளியிட போவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்து இருந்தார். பல்வேறு நூல்களை தொகுத்து தொகுப்பாக இந்த புத்தகம் வெளியிடப்படும் என்று அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து இருந்தார். சங்கத்தமிழ் இலக்கியங்கள் உட்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும், 'திராவிடக் களஞ்சியம்' எனப் பெயரிட முனைந்தால் கடும் போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும் என்று சீமான் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

சீமான்
சீமான் தனது அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை 'திராவிடக்களஞ்சியம்'என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத்திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

திராவிடர்கள்
தமிழர்களை திராவிடர்கள் என்பது, தமிழ்நாட்டைத் திராவிட நாடு என்பது, தமிழ் இலக்கணத்தைத் திராவிட இலக்கணம் என்பது, தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாள் என்பது, தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் திராவிட மன்னன் என்பது, தமிழர் கட்டிடக்கலையைத் திராவிடக்கட்டிடக்கலை என்பது, தமிழர் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்பது, தமிழ் கல்வெட்டுக்களைத் திராவிடக்கல்வெட்டுக்கள் என்பது, தமிழர் பண்பாடான கீழடியைத் திராவிடப்பண்பாடெனத் திரிப்பது என தமிழர்களின் மொழி, இனம், நிலம், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, நாகரீகம் தொடர்பான தொன்ம அடையாளங்கள் யாவற்றையும் அழித்து, அவற்றின் மீது திராவிட முத்திரை குத்தியது போதாதென்று, தற்போது, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான வரலாற்று பெருஞ்சான்றுகளாகவும், யாராலும் மறுக்கமுடியாத தரவுகள் நிறைந்த ஆவணங்களாகவுமுள்ள தமிழ் நூல்களைத் 'திராவிடக்களஞ்சியம்' எனும் பெயரில் அடையாள மாற்றம் செய்ய முயல்வது திராவிடத்திருட்டுத்தனத்தின் உச்சமாகும். இந்நாடு தமிழ்நாடு; இங்கு வாழும் மக்கள் தமிழ் மக்கள்; மொழி தமிழ்மொழி; அதில் எழுதப்பட்டவை யாவும் தமிழ் இலக்கியங்கள்; அந்த நூல்களைத் தொகுக்கின்றபோது மட்டும் எப்படித் திராவிடக்களஞ்சியமாக மாறும்? எனும் கேள்விக்கு எவரிடமும் விடையில்லை.

தமிழினத் தலைவர்
தமிழர் தலைவர், தமிழினத் தலைவர் என்று அடைமொழிகளைத் தங்களுக்கு வைத்துக்கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாடு எனப்பேசி வாக்குகளைப் பெற்று வென்று, ஆட்சியதிகாரத்தை அடைந்துபிறகு, திராவிட இனம் , திராவிடக் களஞ்சியம், திராவிடச் சிறுத்தை என்று பேசுவது திட்டமிட்ட தமிழர் அடையாள அழிப்பு வேலையாகும். இப்போது திராவிடம், திராவிடர் என்று பேசுவோர், தேர்தலுக்கு முன் வாக்கு கேட்டு செல்லும்போதோ, தங்கள் கட்சி மாநாடுகளுக்கு அழைக்கும்போதோ திராவிடர்கள் என்று ஒருபோதும் கூறுவதில்லையே ஏன்? திராவிட இனம் கூறிவிட்டு நாட்டின் பெயரை மட்டும் திராவிட நாடு என்று மாற்றாமல் ஏன் தமிழ்நாடு என்று மாற்றினீர்கள்?

வரலாற்றுப்பேரவலம்
அந்நியர்கள் தமிழர் நிலத்தில் ஆளுகை செய்யவும், அதிகாரம் செலுத்தி தமிழர்களை அடிமைப்படுத்தவும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அரசியல் விலங்குதான் திராவிடமாகும். அடிப்படையில், திராவிடர்கள் எனக் கூறப்படுவோர்க்கு தனித்த அடையாளங்கள் ஏதுமில்லாததால், தமிழர்களது மொழி, இன, தேச, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்களைத் திருடித் தன்வயப்படுத்துகிற சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். தற்போதைய செயல்பாடும் அதன் நீட்சியேயாகும். மொத்தத்தில், தமிழர்களை திராவிடர்கள் எனத் தவறாக அடையாளப்படுத்தியது ஒரு வரலாற்றுப்பேரவலமாகும்.

பேராபத்து
ஆரிய அதிகார வர்க்கம், தமிழ் மொழியிலுள்ள ஊர்களின் பெயர்களைச் சமஸ்கிருதமாக மாற்றியது. தமிழர் தெய்வங்களின் பெயர்களைச் சமஸ்கிருதமாக மாற்றியது. மக்களின் பெயர்களும் சமஸ்கிருதமாக மாறியது. மக்கள் பெயரும், ஊர்களின் பெயரும், தெய்வங்களின் பெயரும் வடமொழியாக்கப்படும்போது, அந்நிலமே தமிழர் அல்லாத ஆரியர்கள் வாழ்ந்த இடங்களாக அடையாளப்படுத்தக்கூடிய ஆபத்துண்டு. எனவே, பெயர் மாற்றம் என்பது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. அது நம் அடையாள அழிப்பு. வரலாற்றுத்திரிபாகும். மொழியிலுள்ள பெயர்களை மாற்றுவதே அடையாள அழிப்பென்றால், திராவிடம், திராவிடர், திராவிட நாடு எனக்கூறி, தமிழ் மொழியின், இனத்தின், நிலத்தின் பெயரையே மாற்றுவது அதைவிடப் பன்மடங்கு பேராபத்தாகும், என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார்.

தங்கம் தென்னரசு
இந்த நிலையில் சீமானின் அறிக்கையை தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். தங்கம் தென்னரசு அளித்த பதிலில், திராவிடக் களஞ்சியம் வெளியிடுதல் தொடர்பாகச் சில தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பலர் பொய்களை பரப்பி வருகிறது. இது தொடர்பாக பரபரப்படும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது. இளைய தலைமுறையினருக்குச் இலக்கியச் செல்வத்தை கொண்டு சேர்க்கும் வகையில் இந்த முயற்சி செய்யப்படுகிறது.

சிந்து சமவெளி
சிந்து சமவெளி நாகரீகத்திற்கு நமக்கும் வரலாற்று ரீதியாக நிறைய தொடர்பு உள்ளது. வரலாற்று ரீதியாக நமது கலாச்சாரங்களுக்கு இடையில் பல ஒற்றுமைகள் உள்ளது. இது தொடர்பாக நிறைய புத்தகங்கள்கள், கட்டுரைகள் உள்ளன. இதை எல்லாம் தொகுத்து தனியாக திராவிட களஞ்சியம் என்று வெளியிட இருக்கிறோம். ஆனால் நாங்கள் ஏதோ சங்க தமிழ் நூல்களை திராவிட களஞ்சியம் என்று பெயரிட நினைப்பதாக செய்திகளை பரப்புவது தவறானது.

படிங்க
அடிப்படை ஆதாரமற்ற புகார் இது. ங்க தமிழ் நூல்களை திராவிட களஞ்சியம் என்று பெயரிட நாங்கள் திட்டமிடப்படவில்லை. அறிக்கையை ஒழுங்காக படித்திருக்க வேண்டும். அப்படி படிக்காமல் அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டாம். இந்த அறிவிப்பை வைத்து யாரும் குட்டையைக் குழப்பவும் வேண்டாம். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலவும் வேண்டாம். அறிக்கையை தெளிவாகப் படிக்காமல், அதை புரிந்துகொள்ளாமல் யாரும் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன், என்று தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications