லோ வோல்டேஜ், ஹை வோல்டேஜால் பிரிட்ஜ் , வாஷிங் மெஷின் ரிப்பேரா? சட்டசபையில் தங்கம் தென்னரசு அதிரடி!
சென்னை: மின்னழுத்த பிரச்சினைக்குத் தீர்வு காண ரூ 200 கோடி மதிப்பில் 2500 மின்மாற்றிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் எரிசக்தி துறை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் காசி விஸ்வநாதர் ஆலயம், திருநாகேஸ்வரம் , கவுதமேஸ்வரர் கோயில், வீர சைவ மடம், அபிமுகேஸ்வரர் ஆலயம், சாரங்கபாணி ஆலயம், சோமேஸ்வரர் ஆலயம், கும்பேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில், சக்ரபாணி கோயில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் ஆகிய திருத்தலங்களில் தேரோடும் வீதிகளில் மேல் செல்லும் மின் கம்பிகள் அனைத்தும் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.

இதன் மூலம் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதுடன் மின் விபத்துகளும் தவிர்க்கப்படும். சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டும் மின் சுமையைக் குறைப்பதற்காகவும் 19 திறன் மின்மாற்றிகளை மேம்படுத்தும் பணிகள் ரூ.2.17 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
மின் திறனூக்க செயலகம் 2023 ஆம் ஆண்டுக்கான மாநில எரிசக்தி திறன் குறியீட்டை வெவெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் எரிசக்தி திறனை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் பெரும் அளவிலான மின்சார சேமிப்பை ஏற்படுத்துவதற்கும், வீட்டுவசதி, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறைகளில் விரிவான எரிசக்தி திறன் மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்.
அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்து தமிழ்நாட்டுக்கென நிர்ணயிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு ஏதுவாக சூரியசக்தி, காற்றாலை மற்றும் இதர பசுமை எரிசக்தி ஆதாரங்களை கொண்டு தனியார் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் பசுமை மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதுள்ள மின் கட்டமைப்பைப் பயன்படுத்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியினை அதிகரிப்பதற்காக, காற்றாலை மற்றும் சூரிய எரிசக்தியுடன் இணைந்த மின்னுற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கை வகுக்கப்படும்.
மின்வாரிய களப் பணியாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு உபகரணங்களை தவிர கூடுதல் பாதுகாப்புக்காக, மின் பணிகளை மேற்கொள்ளும்போது மின் கட்டமைப்பு தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா? என்பதை கண்டறியும் எச்சரிக்கை உணரி சாதனங்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
யானை வழித் தடங்களில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க, அடர்ந்த காடுகள் மற்றும் வனப் பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளின் தாழ்வழுத்த பகுதியில் மோல்டட் கேஸ் சர்க்யூட் பிரேக்கர் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். தரமான மின்சார விநியோகத்துக் காக 25, 63, 100, 200 மற்றும் 250 கிலோ வோல்ட் ஆம்பியர் என பல்வேறு திறன்களைக் கொண்ட 2,500 புதிய மற்றும் கூடுதல் மின் விநியோக மாற்றிகள் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் அழுத்த பிரச்சினைகள் லோ வோல்டேஜ், ஹை வோல்டேஜ் என மாறி மாறி ஏற்படும். இந்த நேரங்களில் மின் சாதன பொருட்களை இயக்கவும் கூடாது, அது இயங்கவும் இயங்காது. இது போன்று மின்னழுத்த பிரச்சினை இருந்தால் அடிக்கடி இயந்திரங்கள் பழுதாகும் நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications