Exclusive: பாஜக மக்களை மூளைச் சலவை செய்கிறது; சசிகலாவால் மட்டுமே அதிமுக மீண்டெழும்; சீறும் தனியரசு!
சென்னை: பாஜக மக்களை மூளைச் சலவை செய்து வருவதாக கூறுகிறார் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு.
மழைவெள்ளத்தால் சென்னை மிதந்ததற்கு, கடந்த அதிமுக அரசின் மோசமான நிர்வாக லட்சணமே காரணம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்ட மேலும் சில விவரம் பின்வருமாறு;

வீழ்ச்சி பாதை
''கடந்த காலங்களில் பல்வேறு சமூக பிரச்சனைகளை முன்னிறுத்தி பரபரப்பாக இயங்கி வந்த நான், இப்போதும் அதிலிருந்து பின்வாங்கவில்லை. எனது அமைப்பை வளர்த்தெடுக்க வேண்டிய பணிகளையும் சேர்த்து செய்து வருகிறேன். அதிமுகவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் வேதனையாக இருக்கிறது. தனி அமைப்பு நடத்தக்கூடிய நான், இன்னொரு அமைப்பை நினைத்து வருத்தப்படக் காரணம், ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு இயக்கம் இப்படி வீழ்ச்சி பாதையில் செல்கிறதே என்பது தான்.''

மூளைச்சலவை
''பாஜகவை பொறுத்தவரை மதத்தை வைத்து அப்பாவி மக்களை மூளைச் சலவை செய்து வருகிறது. கிராமப்புற மக்களை இப்போது குறி வைத்து மதரீதியிலான அரசியலை முன்னெடுக்க தொடங்கியுள்ளது. பொதுப்பிரச்சனைகளை முன்னிறுத்தி அரசியல் செய்வதை விடுத்து மதத்தை வைத்து அது அரசியல் செய்வதால் பாஜகவையும் பிடிக்காது பிரதமர் மோடியையும் எனக்கு பிடிக்காது.''

உட்கட்சித் தேர்தல்
''அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெறாது என்பதே எனது கணிப்பு. அவ்வாறு நடைபெற்றாலும் கூட அதன்மூலம் தொண்டர்களின், மக்களின் நம்பிக்கையை பெற முடியாது. எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மட்டும் தனியாக கட்சியை நடத்த வேண்டும் என நினைத்தால் அது ஆகாத காரியம். சின்னம்மா, தினகரன், இ.பி.எஸ்., ஒ.பி.எஸ். ஆகிய நான்கு பேரும் இணைய வேண்டும், அப்போது தான் அதிமுக பழைய நிலைக்கு வலிமையாக மாறும். அதுவரை அந்தக் கட்சியில் எந்த வளர்ச்சியும் இருக்காது.''

மழை வெள்ளம்
''சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசின் நிர்வாக லட்சணமே காரணம். எஸ்.பி.வேலுமணி போன்றோர், முறையாக இதில் கவனம் செலுத்தி வடிகால் வசதி ஏற்படுத்தாதன் விளைவே இந்தளவு சென்னையில் இப்போது பாதிப்பு ஏற்படக் காரணம்.'' ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு இவர் அளித்த பேட்டியின் சுருக்கமே இது. முழு வீடியோவை ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications