இரவோடு இரவாக சீரமைக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு.. என்ன நடந்தது?
சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு புதிய வட்டமாக திருவோணம் உதயம் ! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், "தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்" என்னும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள்.

ஒரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அத்தியாவசியச் சேவைகளான சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும், வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் பெறுவதற்காக ஏறத்தாழ 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு மிகுந்த சிரமத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பொருளாதாரச் செலவுகள் அதிகமாகின்றன. அத்துடன் இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக அவர்கள் நாள் முழுவதும் செலவிட்டு அலையவும் வேண்டியுள்ளது.
ஒவ்வொரு நாளும் பொது மக்களின் துயர்துடைப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவோணம் பகுதி மக்களின் சிரமங்கள் தம்முடைய கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவற்றை உடனடியாகக் களைவதற்கு முடிவு செய்தார்கள்.
அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கி மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்குரிய அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் புதிய மாவட்டம்: 1 நவம்பர் 1956 அன்று மாநிலம் உருவாக்கப்பட்டபோது 13 மாவட்டங்கள் தமிழ்நாட்டில் இருந்தது. அதன்பின் நடந்த பல பிரிவுகளுக்குப் பிறகு தற்போது தமிழ்நாடு 38 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் தாலுகாக்களாகவும் சிறிய நிர்வாக வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் சுதந்திரத்தின் போது, இந்தியாவில் மெட்ராஸ் பிரசிடென்சி 26 மாவட்டங்களைக் கொண்டதாக இருந்தது, அதில் 10 மாவட்டங்கள் இன்றைய தமிழ்நாட்டில் இப்போதும் மாவட்டங்களாக உள்ளன, அதாவது செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நீலகிரி, சென்னை, மதுரை, ராமநாதபுரம், சேலம்,, தஞ்சை, திருநெல்வேலி, திருச்சி ஆகியவை இப்போதும் மாவட்டங்களாக உள்ளன.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய மாவட்டங்கள் உதயமாவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உதயமாவது தொடர்பாக விரைவில் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.
கும்பகோணம்
பொள்ளாச்சி
கோவில்பட்டி
பழனி
ஆரணி
விருத்தாச்சலம்
கோபிச்செட்டிபாளையம் ஆகிய மாவட்டங்கள் புதியதாக உதயமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் அறிவிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்டங்கள் பிரிப்பு: இதற்கு முன் 2 அக்டோபர் 1966 இல், தர்மபுரி மாவட்டம், தர்மபுரி, ஹரூர், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி தாலுக்காக்களை உள்ளடக்கிய பழைய சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
14 ஜனவரி 1974 இல், குளத்தூர், திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி தாலுக்காக்களை உள்ளடக்கிய திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பகுதிகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
31 ஆகஸ்ட் 1979 இல், ஈரோடு மாவட்டம் பவானி, ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் தாலுகாக்களை உள்ளடக்கிய பழைய கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
8 மார்ச் 1985 அன்று, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் முந்தைய இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மூன்றாகப் பிரிக்கப்பட்டு சிவகங்கை மாவட்டத்தை உள்ளடக்கிய திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் இளையங்குடி தாலுகாக்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி, வில்லிசுப்புத் தாலுகாக்கள், திருவில்லி, அரும்புத்தூர், திரு. சாத்தூர் மற்றும் ராஜபாளையம் தாலுகாக்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டது.
15 செப்டம்பர் 1985 இல், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், பழனி மற்றும் கொடைக்கானல் தாலுக்காக்களை உள்ளடக்கிய பழைய மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. 20 அக்டோபர் 1986 இல், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருவைகுண்டம் தாலுகாக்களை உள்ளடக்கிய பழைய திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது
இதேபோல் சமீபத்தில் 30 நவம்பர் 2019 அன்று, திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு, திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் மற்றும் வண்டலூர் தாலுகாக்களை உள்ளடக்கிய முந்தைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டது.. 24 மார்ச் 2020 அன்று, மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுகாக்களை உள்ளடக்கிய முந்தைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications