ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை
சென்னை: புதிய கல்வி கொள்கை வரைவு குறித்த தனது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த சனிக்கிழமை சாலி கிராமத்தில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் 'அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் நடத்துவது ஏன்?' என்று கேள்வியெழுப்பி நீட் தேர்வையும் விமர்சித்திருந்தார். சூர்யா ஆவேசமாகப் பேசியது தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாகியது.

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
அதே நேரம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை கண்டிக்கிறேன். கல்வியில் பலருக்கு உதவி செய்து வரும் நடிகர் சூர்யாவிற்கு கல்வி குறித்து பேச உரிமை உள்ளது எனவும், அதனால் சூர்யாவின் கருத்துக்கு தமது ஆதரவு உண்டு என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திரையுலகில் பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு, கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications