அண்ணாமலை இப்படியே பேசிக்கொண்டிருந்தால்.. தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட் கூட வாங்காது! -தராசு ஷியாம்
சென்னை: அண்ணாமலை இப்படியே பேசிக்கொண்டிருந்தால், தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட் கூட வாங்காது என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரித்துள்ளார்.
மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது அண்ணாமலை வகிக்கும் பதவிக்கு கொஞ்சம் கூட அழகல்ல என்றும் அரசியலில் எவ்வளவு பெரிய சீனியர் துரைமுருகன், அவரே பெரியார் குறித்த பேச்சின் அர்த்தம் பற்றி வருத்தம் தெரிவிக்கும் போது, அண்ணாமலைக்கு ஏன் இன்னும் அந்த பக்குவம் வரவில்லை என வினவியுள்ளார்.

அதிமுக பாஜக மோதல் குறித்து செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அலைபேசி வழி கருத்து தெரிவிக்கும் போது இதனைக் கூறினார். அண்ணாமலை இப்போது தான் அரசியலில் பாலபாடமே கற்கிறார், அரசியலில் கத்துக்குட்டியான அவர் இப்படியெல்லாம் பேசுவது கொஞ்சம் கூட நாகரீகம் கிடையாது என தராசு ஷியாம் கொந்தளித்தார்.
அதிமுக -பாஜக கூட்டணியை பொறுத்தவரை மனதளவில் முறிந்தது முறிந்தது தான் என்றும் அதிமுகவில் உள்ள ஒரு சில நிர்வாகிகள் தங்கள் சுயலாபத்திற்காக பாஜகவுடன் கூட்டணியை தொடர தலைமையை வலியுறுத்தி வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். கீழ்மட்டத்தில் உள்ள இரண்டு கட்சிகளின் தொண்டர்களை பொறுத்தவரை அதிமுக -பாஜக கூட்டணி வேண்டாம் என்று தான் விரும்புகிறார்கள் என்ற கள யதார்த்தத்தையும் சொன்னார்.
அண்ணாமலையை போல் ஒருவரை 40 ஆண்டுகால பத்திரிகையாளர் வாழ்வில் நான் பார்த்ததேயில்லை என்றும் சீனியர்களை இன்சல்ட் செய்து அரசியல் செய்து வருகிறார் என்றும் எப்போது பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றாரோ அப்போதிருந்தே அவர் இது போல் தான் நடந்துகொள்கிறார் என தராசு ஷியாம் விமர்சித்துள்ளார். இதனால் கூட்டணி சர்ச்சைக்கு அதிமுக தலைமை தான் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications