Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா சொன்ன ஒரு வார்த்தை.. குகேஷின் மனவலிகள்! இவ்வளவு நல்ல பையனா இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற செஸ் வீரர் குகேஷ் தனக்காக அவரது பெற்றோர்கள் செய்த தியாகங்களைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற 18ஆவது சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டு இளைஞர் குகேஷ், தனது 18 ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தார். அவரது திறமையை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 17 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு 5 கோடிக்கான காசோலையை அளித்தார்.

gukesh dommaraju chennai chess champion

விழாவில் பேசிய அவர், “செஸ் வீரர் குகேஷின் விடாமுயற்சியை தமிழ்நாட்டு இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று பாராட்டினார். கூடவே நம்ம பையன், சென்னை பையன் குகேஷ். அதனால்தான் உலகமே வியந்து குகேஷை பாராட்டி வருகிறது என்று பெருமையாகக் குறிப்பிட்டார்.

தனது 18 வயதில் இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்துள்ள குகேஷ் தனது வெற்றியைப் பற்றி தலைக்கு ஏற்றிக் கொள்ளவில்லை. இந்த வெற்றி குறித்து குகேஷ் அவரது எக்ஸ் தள பதிவில் கூட 18th @ 18! என ஏ.ஆர்.ரஹ்மானைவிட மிகக் குறைவான வார்த்தையைப் பயன்படுத்தி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அவரது சுபாவமே அப்படித்தான். அதிகமாக அவர் பேசமாட்டார் என்று அவரது நட்பு வட்டம் தகவல் கொடுத்து வருகின்றனர்.

ஒரு சர்வதேச சாம்பியன் இந்தளவுக்கு அடக்கமானவரா? என்றால் ஆமாம் என்கிறார் குகேஷ். "அம்மாவின் வார்த்தைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்து போய் உள்ளன. ஒருவன் கருணையுடனும் பணிவுடனும் இல்லை என்றால் வாழ்க்கையில் வெற்றி முழுமை அடையாது" என்று அம்மா சொல்லிக் கொடுத்த பாடத்தைக் கிளிப் பிள்ளை போல் உச்சரிக்கிறார் இந்த இளம் கிராண்ட் மாஸ்டர்.

இதைக் கேட்கும் போது தில்லுமுல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன், ஒரு காட்சியில் ரஜினியிடம் “வேறு என்னவெல்லாம் உங்க அம்மா சொல்லிக் கொடுத்து இருக்கிறார்?” எனக் கேட்கும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

"எந்த உயரத்திற்குப் போனாலும் 'அடக்கமாக' இருக்கவேண்டும். அதையே நான் விரும்புகிறேன்" என்று பேசி இருக்கிறார் குகேஷ். அவர் தமிழரா? தெலுங்கரா? என அடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு தனது அமைதியின் மூலம் பதில் கொடுத்திருக்கிறார் குகேஷ். ஒரு நல்ல மனிதனாக இருப்பது எல்லாவற்றைவிடவும் மேலானது என்றும் அப்படி இருப்பதே சதுரங்க ஆட்ட வாழ்க்கையில் தனது மதிப்பு நிலையாக இருக்கும் என்றும் அவரது அம்மா பத்மா குமாரி தொடர்ந்து தனக்கு நினைவூட்டி இருக்கிறார் என்று குகேஷ் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், “என் அம்மா வேல்யூஸ், ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்தும் கொடுப்பவர். எனக்கும் அதையே நினைவூட்டிக் கொண்டு இருக்கிறார். அம்மா அடிக்கடி எனக்குக் கதைகளைச் சொல்வார். அதில் சொல்லப்பட்டுள்ள அர்த்தமுள்ள மேற்கோள்களைப் பகிர்ந்து மனதில் பதியச் சொல்வார்” என்பதைச் சுட்டிக்காட்டி குகேஷ் பேசியுள்ளார்.

இவரது பெற்றோர்கள் இந்த வெற்றிக்குப் பின்னால் பல தியாகங்களைச் செய்துள்ளனர். குகேஷ் அப்பா ரஜினிகாந்த் மருத்துவ பணியை விட்டுவிட்டு இவருடன் போட்டிகளுக்கு உடன் உதவியாகச் சென்றுள்ளார். அம்மா பத்மாவின் தியாகங்களைப் பற்றிப் பேசிய குகேஷ், "எனது பயணத்தில் எனது குடும்பத்தின் மிகப்பெரிய பங்கு உள்ளது. அவர்களின் தியாகங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் வெற்றி பெறுவதற்காக அவர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் நிறைய தியாகங்களைச் செய்துள்ளனர். நான் அவர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் நிறையக் கற்றுக்கொள்கிறேன்" என்கிறார்.

அவர் எக்னாமிக் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “உலக சாம்பியன்ஷிப்பை வென்றதால் நான் உலகின் சிறந்த வீரர் என அர்த்தமல்ல. சாம்பியன்ஷிப்பை வெல்வது என்பது ஒரு மைல்கல் மட்டுமே. மேலும் அதிக உயரங்களை அடைய என்னைத் தொடர்ந்து முன்னோக்கிச் செலுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். உலகின் சிறந்த வீரராக மாறி விளையாட்டில் ஆதிக்கம் செலுத்துவதே எனது இறுதி இலக்கு” என நம்பிக்கையோடு பேசி இருக்கிறார் குகேஷ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+