நான் அப்படி சொல்லியிருக்க கூடாது.. தனது பேச்சையே அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர் அப்பாவு
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் காரணமாக அவையில் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது, சபாநாயகர் அப்பாவு தனது பேச்சையே அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார். தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இதேபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக 2-வது நாளாக இன்றும் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. அவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விஷசாராய உயிரிழப்பு தொடர்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரத்திற்கு முன்னால் அவையின் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பது சரியல்ல என்று அப்பாவு சபாநாயகர் அப்பாவு கண்டிப்பு காட்டினார். மேலும் சட்டமன்றம் மக்கள் பிரச்சினையை பேச வேண்டிய இடம் என்றும் அப்பாவு கூறினார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு கூறுகையில், "நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தேன். முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையோடு சபை நடவடிக்கைகளில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இன்றைக்கு வந்த உடன் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.
நாகரீகமாக சபையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல நான் பேசும் போது குறிப்பிட்ட ஒரு வார்த்தையை மூத்த அமைச்சர் கே என் நேரு நினைவுபடுத்தினார். அந்த வார்த்தையை நான் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறேன். அந்த வார்த்தையை நான் பயன்படுத்தியிருக்க கூடாது.
ஆகவே நாகரீகமாக அதிமுக உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாக சொல்கிறேன்" என்றார்.
தமிழக சட்டசபை இன்று 3வது நாளாக கூடியது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையில் வருகை தந்தனர். அவை கூடியதும் சபாநாயகர் அப்பாவு முதலில் கேள்வி நேரம் என்றும் அதன் பிறகு கள்ளக்குறிச்சி சாராய விவகாரம் பற்றி பேச அனுமதிக்கப்படும் என்றார். ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications