சில்லித்தனமா கேட்ட வங்கி.. ₹20000 பணத்துக்கு மதியம் 1 மணிக்கு கல்லறையை தோண்டிய தம்பி.. ஆடிப்போன மக்கள்
சென்னை: ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமிய வங்கியில், மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது உடலைத் தோண்டி எடுத்து, எலும்புக்கூட்டை வங்கிக்குச் சுமந்து வந்த ஒரு நபரின் செயல் தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. , இந்த சம்பவத்தின் பின்னணியை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
கியோஞ்சர் மாவட்டம், படானா பிளாக்கில் உள்ள தியனாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா (50). இவரது மூத்த சகோதரி கர்லா முண்டா (56), கடந்த ஜனவரி 26, 2026 அன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார்..

கர்லா முண்டா தான் வளர்த்து வந்த கால்நடைகளை விற்றுச் சேர்த்த சுமார் 19,300 ரூபாய் தொகையை ஒடிசா கிராமிய வங்கியில் அதாவது மாலிபோசி கிளையில் சேமித்து வைத்திருந்தார். அவருக்குச் சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லாததால், தம்பி ஜீத்து முண்டா அந்தப் பணத்தை எடுக்க வங்கிக்குச் சென்றுள்ளார்.
பழங்குடியினம் ஜீத்து முண்டா
படிப்பறிவில்லாத பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜீத்து முண்டாவிடம், வங்கி ஊழியர்கள் உரிய ஆவணங்களைக் கேட்டுள்ளனர். இதை பற்றி ஜீத்து முண்டா செய்தியாளர்களிடம் விரிவாக விவரித்தார்
"நான் பலமுறை வங்கிக்கு அலைந்தேன். ஆனால் அங்கிருந்தவர்கள், 'பணத்தை எடுக்க வேண்டும் என்றால் கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வாருங்கள்' என்று சொன்னார்கள்.. என் அக்கா இறந்துவிட்டார் என்று நான் பலமுறை சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவர் இறந்துவிட்டார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்? அதனால்தான் விரக்தியில் அக்கவின் கல்லறையைத் தோண்டி எலும்புக்கூட்டை எடுத்து வந்தேன்" என்றார்.
திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில், ஜீத்து முண்டா தனது சகோதரியின் எலும்புக்கூட்டை ஒரு பிளாஸ்டிக் சாக்கு மூட்டையில் கட்டி, சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சுட்டெரிக்கும் வெயிலில் தோளில் சுமந்து வங்கிக்கு வந்துள்ளார். வங்கியின் வாசலில் எலும்புக்கூட்டை வைத்ததைக் கண்டு ஊழியர்களும் பொதுமக்களும் கடும் பீதியடைந்தனர். தகவலறிந்து வந்த படானா காவல் நிலைய ஆய்வாளர் கிரண் பிரசாத் சாஹு, ஜீத்துவைச் சமாதானப்படுத்தி எலும்புக்கூட்டை மீண்டும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
அரசு அதிகாரிகளின் நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்துத் தெரிந்ததும் ஒடிசா மாநில அமைச்சர் சுரேஷ் பூஜாரி கடும் கண்டனம் தெரிவித்தார். வங்கி ஊழியர்களின் அணுகுமுறை "மனிதாபிமானமற்றது" என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்..
கியோஞ்சர் துணை ஆட்சியர் உமா சங்கர் தலாய் இதை பற்றி சொல்லும்போது, ஜீத்து முண்டா தனது சகோதரியின் முதல் நிலை வாரிசு கிடையாது என்பதால் வங்கி ஆவணங்களைக் கேட்டிருக்கலாம், ஆனால் அதை அவருக்குப் புரியும்படி விளக்கத் தவறியது வங்கியின் குற்றம் என்று சுட்டிக்காட்டினார்.
நிதியுதவி மற்றும் தீர்வு
மாவட்ட நிர்வாகம் ஜீத்து முண்டாவின் அவசர தேவைகளுக்காக ரெட் கிராஸ் நிதியிலிருந்து உடனடியாக 20,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் அவருக்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழைப் பெற்றுத் தந்து, வங்கியிலுள்ள பணத்தை உடனடியாக அவரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்..
வங்கியின் வாரிசுதாரராக அதாவது நாமினியாக இருந்த நபரும் ஏற்கனவே இறந்துவிட்டதால், தற்போது ஜீத்து முண்டா மட்டுமே அந்தப் பணத்தைப் பெறத் தகுதியானவராக இருக்கிறார்...!!!













Click it and Unblock the Notifications